செய்திகள்

மோடி மீது மதிப்பு வைத்து இருக்கிறேன்: பா.ஜ.க என்னை தவறாக சித்தரிக்கிறது - ராகுல்

Published On 2017-12-14 06:03 GMT   |   Update On 2017-12-14 06:15 GMT
பிரதமர் மோடி மீது மதிப்பும், மரியாதையும் வைத்து இருப்பதாகவும், தன்னைப் பற்றி பா.ஜ.க. தவறாக சித்திரிப்பதாகவும் ராகுல் காந்தி கூறியுள்ளார்.
புதுடெல்லி:

குஜராத் தேர்தல் பிரசாரத்தின் போது பிரதமர் மோடி காங்கிரசையும், ராகுல்காந்தியையும் கடுமையாக தாக்கிப் பேசினார்.

இதுகுறித்து ராகுல் காந்தி நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அவர் கூறியதாவது:-

குஜராத் மக்களை நேரு குடும்பத்துக்கு என்றைக்கும் பிடிக்காது என்று பிரதமர் மோடி அடிக்கடி சொல்கிறார். இதனால் நான் அவர் மீது எந்தவித கோபமும் கொள்ளவில்லை. அவர் மீது எனக்கு வெறுப்பும் வரவில்லை.

உண்மையை சொல்லப்போனால் நான் அவர் மீது மிகுந்த மதிப்பும், மரியாதையும் வைத்துள்ளேன். சமீப காலமாக எனக்கு அவர் நிறைய வி‌ஷயங்களை கற்றுத் தருபவராக உள்ளார்.

எங்கள் குடும்பத்தைப் பொறுத்தவரை யார் மீதும் நாங்கள் வெறுப்பு கொள்வதில்லை. எனக்கும் கூட அந்த மனப்பக்குபவம் இருக்கிறது. எனவேதான் நான் மோடி பற்றி தரக்குறைவாக பேசுவதே இல்லை.



ஆனால் பா.ஜ.க. தலைவர்கள் என்னைப் பற்றி மோசமாக பேசுகிறார்கள். இந்த அளவுக்கு பேசுவார்களா? என்று எனக்கு ஆச்சரியமாக உள்ளது. நான் அமெரிக்காவுக்கு சென்று சிகிச்சை பெற்றதாக பொய் தகவலை பரப்புகிறார்கள்.

எனது தோற்றத்தை மேம்படுத்த நான் சிகிச்சை பெற்றதாக தவறான தகவலை பரப்பி அவதூறு செய்கிறார்கள். எனக்குள்ள நல்ல பெயரையும் இமேஜையும் கெடுக்க பா.ஜ.க. தலைவர்கள் தொடர்ந்து முயற்சி செய்கிறார்கள்.

அவர்களது வதந்தி மக்கள் மத்தியில் எடுபடாது. குஜராத் மாநில மக்கள் அதை நம்பவில்லை. இதனால் பா.ஜ.க. தலைவர்கள் பயப்படுகிறார்கள்.

குஜராத் தேர்தல் முடிவுகள் நிச்சயமாக ஆச்சரியம் தருவதாக அமையும். எங்களது ஒருங்கிணைந்த முயற்சிக்கு நிச்சயம் ஆச்சரியப்படத்தக்க வெற்றிகள் கிடைக்கும். குஜராத்தில் காங்கிரசார் பணியாற்றிய தேர்தல் பணி எனக்கு மிகுந்த மன நிறைவைத்தந்துள்ளது.

மற்ற மாநில காங்கிரஸ் தொண்டர்களும் இதே போன்று பணியாற்ற வேண்டும். அதுதான் நாட்டு மக்களுக்கு செய்யும் கடமையாக இருக்கும்.

இவ்வாறு ராகுல்காந்தி கூறினார்.
Tags:    

Similar News