செய்திகள்

தமிழ்நாட்டில் உள்ளாட்சி தேர்தல் நடத்த கோரும் வழக்கை விசாரிக்க சுப்ரீம் கோர்ட்டு மறுப்பு

Published On 2017-11-27 23:55 GMT   |   Update On 2017-11-27 23:55 GMT
தமிழ்நாட்டில் உள்ளாட்சி தேர்தல் நடத்த கோரும் வழக்கை சுப்ரீம் கோர்ட்டில் விசாரிக்க முடியாது என்றும் மனுதாரர் விரும்பினால் ஐகோர்ட்டை அணுகலாம் என்றும் அறிவுறுத்தினர்.
புதுடெல்லி:

தமிழ்நாட்டில் உள்ளாட்சி தேர்தல் நடத்துவது குறித்த அறிவிப்பை மாநில தேர்தல் ஆணையம் 15 நாட்களுக்குள் வெளியிட உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று கோரி மதுரையைச் சேர்ந்த தமிழ்நாடு பொது நல வழக்குக்கான மையம் சார்பில் கே.கே.ரமேஷ் என்பவர் சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்து இருந்தார்.

இந்த நிலையில் சுப்ரீம் கோர்ட்டில் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் ஏ.எம்.கன்வில்கர், ஒய்.வி.சந்திரசூட் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு மனுதாரர் தரப்பு வக்கீல் ஜெயசுகின் நேற்று ஆஜரானார். மனுதாரர் கே.கே.ரமேஷ் கோர்ட்டில் பார்வையாளர் பகுதியில் இருந்தார்.

விசாரணை தொடங்கியதும் நீதிபதிகள், இந்த வழக்கை சுப்ரீம் கோர்ட்டில் விசாரிக்க முடியாது என்பதால் வழக்கை முடித்து வைப்பதாகவும், மனுதாரர் விரும்பினால் ஐகோர்ட்டை அணுகலாம் என்றும் அறிவுறுத்தினர். 
Tags:    

Similar News