search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "refused"

    • திருக்கோவிலூர் தொகுதி காலியாக இருப்பதாக தெரிவித்த அறிவிப்பு திரும்பப் பெறப்பட்டது.
    • முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி கடிதம் எழுதியுள்ளார்.

    முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு விதிக்கப்பட்ட தண்டனையை உச்சநீதிமன்றம் நிறுத்தி வைத்தது.

    நீதிமன்ற தீர்ப்பின் நகல் வந்தவுடன் திருக்கோவிலூர் தொகுதி காலியாக இருப்பதாக தெரிவித்த அறிவிப்பு திரும்பப் பெறப்பட்டது.

    இதையடுத்து, அமைச்சரவையில் மீண்டும் பொன்முடியை சேர்க்க பரிந்துரைத்து ஆளுநருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதி இருந்தார்.

    இந்நிலையில், திமுக எம்எல்ஏ பொன்முடிக்கு பதவிப்பிரமாணம் செய்து வைக்க ஆளுநர் ஆர்.என்.ரவி மறுப்பு தெரிவித்துள்ளார்.

    பொன்முடி மீதான வழக்கு நிலுவையில் உள்ளதால் பதவிப்பிரமாணம் செய்து வைக்க மறுப்பு தெரிவித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி கடிதம் எழுதியுள்ளார்.

    • குடிக்க பணம்தர மறுத்த தந்தைக்கு அரிவாள்வெட்டு விழுந்தது.
    • மகன் கைது செய்யபட்டார்.

    முதுகுளத்தூர்

    ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே உள்ள ஆதன குறிச்சி கிராமத்தைச் சேர்ந்தவர் ராமர் (வயது 60). இவர் பருத்தி விற்ற பணத்தை முதல் மனைவியின் மகன் பழனிசாமி (28) குடிப்பதற்காக கேட்டார். ராமர் கொடுக்க மறுத்தார்.

    இதில் ஆத்திரம் அடைந்த பழனிசாமி, பெற்ற தந்தை என்றும் பாராமல் ராமரை அரிவாளால் வெட்டினார். படுகாயம் அடைந்த அவர் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து மனைவி வள்ளி (45) கொடுத்த புகாரின் பேரில் முதுகுளத்தூர் காவல்நிலைய இன்ஸ்பெக்டர் இளவரசு வழக்குப்பதிவு செய்து பழனிசாமியை கைது செய்தனர்.

    • தவளக்குப்பம் அருகே மது குடிக்க பணம் தர மறுத்த வாலிபரை அரிவாளால் வெட்டி விட்டு அதனை தடுக்க முயன்ற தந்தையை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த கும்பலை போலீசார் தேடி வருகிறார்கள்.
    • கிருமாம்பாக்கத்தில் கட்டிட வேலை முடிந்து வீட்டுக்கு வந்து கொண்டிருந்தார்.

    புதுச்சேரி:

    தவளக்குப்பம் அருகே மது குடிக்க பணம் தர மறுத்த வாலிபரை அரிவாளால் வெட்டி விட்டு அதனை தடுக்க முயன்ற தந்தையை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த கும்பலை போலீசார் தேடி வருகிறார்கள்.

    தவளக்குப்பம் அருகே பூரணாங்குப்பம் திரவுபதியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் குப்பன்(வயது46). இவர் தவளக்குப்பம்-கடலூர் மெயின் ரோட்டில் பழக்கடை வைத்து நடத்தி வருகிறார். இவரது மூத்த மகன் பிரவீன்குமார் (22). இவர் கட்டிட வேலை செய்து வருகிறார்.

    பிரவீன்குமாரும், பூரணாங்குப்பம் திடீர் நகரை சேர்ந்த அரவிந்த், ராகுல்காந்தி மற்றும் ரோஜா நகரை சேர்ந்த விஸ்வா ஆகியோரும் நண்பர்கள் ஆவார்கள்.

    இந்த நிலையில் பிரவீன்குமார் கிருமாம்பாக்கத்தில் கட்டிட வேலை முடிந்து வீட்டுக்கு வந்து கொண்டிருந்தார். பூரணாங்குப்பம்-கடலூர் ரோடு சந்திப்பில் வந்த போது அரவிந்த், ராகுல்காந்தி மற்றும் விஸ்வா ஆகிய 3 பேரும் பிரவீன்குமாரிடம் மது குடிக்க பணம் கேட்டனர். ஆனால் பிரவீன்குமார் பணம் கொடுக்க மறுத்து விட்டார். இதனால் அவர்களுக்குள் வாக்குவாதம் முற்றி வாய் தகராறு ஏற்பட்டது.

    இதில் ஆத்திரமடைந்த அரவிந்த் உள்பட 3 பேரும் பிரவீன்குமாரை தாக்கினர். இந்த தாக்குதலில் பிரவீன்குமாருக்கு நெற்றி மற்றும் கையில் காயம் ஏற்பட்டது.

    இந்த தகவல் அறிந்த பிரவீன்குமாரின் தாய் அஞ்சாலாட்சி விரைந்து வந்து பிரவீன்குமாரை ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்று சிகிச்சை அளித்தார்.

    பின்னர் இதுதொடர்பாக நேற்று காலை தவளக்குப்பம் போலீசில் பிரவீன்குமார் புகார் செய்தார். பின்னர் பிரவீன்குமார் வீடு திரும்பினார். போலீசில் புகார் தெரிவித்ததால் ஆவேசமடைந்த அரவிந்த், ராகுல்காந்தி மற்றும் விஸ்வா ஆகிய 3 பேரும் பிரவீன்குமாரின் வீட்டுக்கு வந்தனர். இதனால் பயந்து போன பிரவீன்குமார் வீட்டின் உள்ளே சென்று கதவை உள்பக்கமாக பூட்டிக்கொண்டார்.

    ஆனாலும் அவர்கள் கதவை உடைத்து உள்ளே சென்று எங்கள் மீது போலீசில் புகார் கொடுக்கிறாயா? என்று கூறியபடி அரிவாளால் பிரவீன்குமாரை வெட்டினர். இந்த சத்தம் கேட்டு ஓடி வந்த பிரவீன்குமாரின் தந்தை குப்பனை அவர்கள் ஜல்லி கரண்டியால் வெட்டினர்.

    மேலும் வீட்டு முன்பு நிறுத்தியிருந்த மோட்டார் சைக்கிள் மற்றும் மினிவேன் ஆகியவற்றை தடியால் அடித்து உடைத்து சேதப்படுத்தியதோடு பிரவீன்குமாரையும், அவரது தந்தை குப்பனையும் கொலை செய்து விடுவதாக மிரட்டிவிட்டு அந்த கும்பல் தப்பியோடி விட்டது.

    இந்த தாக்குதலில் காயமடைந்த பிரவீன்குமார் மற்றும் அவரது தந்தை குப்பன் ஆகியோர் புதுவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.

    இதுகுறித்து குப்பன் கொடுத்த புகாரின் பேரில் தவளக்குப்பம் போலீசார் வழக்கு பதிவு செய்து அரவிந்த், ராகுல்காந்தி, விஸ்வா ஆகிய 3 பேரையும் தேடி வருகிறார்கள்.

    சிதம்பரம் பாராளுமன்றத் தொகுதி பொன்பரப்பியில் மறு வாக்குப்பதிவுக்கு உத்தரவிட சென்னை உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது.
    சென்னை:

    தமிழகத்தில் கடந்த மாதம் 18-ம் தேதி பாராளுமன்றத் தேர்தல் மற்றும் 18 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நடைபெற்றது. வாக்குப்பதிவு நடைபெற்றபோது, விடுதலை சிறுத்தைகள் கட்சி  தலைவர் திருமாவளவன் போட்டியிட்ட சிதம்பரம் தொகுதியில் உள்ள பொன்பரப்பி கிராமத்தில் வன்முறை வெடித்தது.

    இந்நிலையில், பொன்பரப்பியில் மறு வாக்குப்பதிவுக்கு உத்தரவிடக்கோரி சிதம்பரம் தொகுதி வாக்காளர் விஷ்ணுராஜ் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அவர் தனது மனுவில், பொன்பரப்பி கிராமத்தில் தேர்தல் நாளன்று வன்முறை ஏற்பட்டதால், 275 பேர் வாக்களிக்கவில்லை என்றும், அங்கு மறு வாக்குப்பதிவுக்கு உத்தரவிட வேண்டும் என்றும் கூறியிருந்தார்.



    அவரது மனுவை பரிசீலித்த நீதிபதிகள், மறுவாக்குப்பதிவுக்கு உத்தரவிட மறுத்துவிட்டனர். நாளை வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ள நிலையில் எப்படி மறு வாக்குப்பதிவுக்கு உத்தரவிட முடியும்? என கேள்வி எழுப்பிய நீதிபதிகள், தேர்தல் முடிவுகள் வெளியான பின்பு தேர்தல் வழக்காக தொடரும்படி மனுதாரருக்கு அறிவுறுத்தினர்.
    திண்டுக்கல் அருகே குடும்பம் நடத்த வர மறுத்த மனைவியை கணவர் ஓட ஓட விரட்டி படுகொலை செய்தார்.

    கன்னிவாடி:

    கொடைக்கானல் கவுஞ்சி கிராமத்தைச் சேர்ந்தவர் முருகன் (வயது 52). விவசாய கூலித் தொழிலாளி. இவரது மனைவி கருப்பாயி (45). இவர்களுக்கு கார்த்திக் ராஜா என்ற மகன் உள்ளார். இவர் ரெட்டியார் சத்திரம் அருகே உள்ள சுக்காம் பட்டியில் தனது தாத்தா வீட்டில் வசித்து வந்தார். கருப்பாயிக்கும் அவரது கணவருக்கும் இடையே அடிக்கடி குடும்ப பிரச்சினை ஏற்பட்டு வந்தது.

    இதனால் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு கருப்பாயி தனது கணவருடன் கோபித்துக் கொண்டு சுக்காம்பட்டியில் உள்ள தனது பெற்றோர் வீட்டுக்கு வந்து விட்டார். அதன் பின் கணவர் பல முறை குடும்பம் நடத்த வருமாறு அழைத்தும் வரவில்லை.

    நேற்று இரவு மனைவியை பார்ப்பதற்காக முருகன் சுக்காம்பட்டிக்கு வந்தார். அப்போது அவர்கள் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. இன்று காலை கருப்பாயிகுளத்து வேலைக்கு செல்வதற்காக அங்கிருந்த பெண்களுடன் சென்றார்.

    அப்போது மறைந்திருந்த முருகன் மனைவியை அரிவாளால் வெட்ட முயன்றார். உயிருக்கு பயந்து அவர் ஓட முயன்றும் முருகன் விடாமல் விரட்டிச் சென்று வெட்டி சாய்த்தார். இதில் சம்பவ இடத்திலேயே கருப்பாயி உயிரிழந்தார். இது குறித்து ரெட்டியார் சத்திரம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    ஒட்டன்சத்திரம் இன்ஸ்பெக்டர் சீனிவாசன் தலைமையில் ரெட்டியார் சத்திரம் சப்-இன்ஸ்பெக்டர் கலையரசன் மற்றும் போலீசார் அங்கு விரைந்து வந்தனர். கொலை செய்யப்பட்ட கருப்பாயி உடலை மீட்டு திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    தலைமறைவாக இருந்த முருகனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். குடும்ப பிரச்சினையில் கணவனே மனைவியை வெட்டி கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தியது.

    மூடப்பட்ட ஸ்டெர்லைட் ஆலையை பராமரிப்பு பணிக்காக திறக்க உத்தரவிட முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்தது. #Sterlite #SterliteCase #MadrasHighCourt
    சென்னை:

    தமிழக அரசால் மூடப்பட்ட ஸ்டெர்லைட் ஆலையை திறக்கும்படி உத்தரவிடும் அதிகாரம், தேசிய பசுமைத் தீர்ப்பாயத்திற்கு இல்லை என்றும், இது குறித்து வேதாந்தா நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தை அணுகி நிவாரணம் பெற்றுக்கொள்ளலாம் என்றும் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இதையடுத்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வேதாந்தா நிறுவனம் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. ஆலையை மூடியது சட்டவிரோதம் என்றும், ஆலைக்கு மின் இணைப்பு மற்றும் குடிநீர் இணைப்பு வழங்க தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்றும், அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.

    இந்த வழக்கு கடந்த 1-ம்தேதி விசாரணைக்கு வந்தபோது, ஆலையை திறப்பதற்கோ, குடிநீர் இணைப்பு, மின் இணைப்பு உள்ளிட்ட வசதிகளை வழங்குவதற்கோ, எந்தவித இடைக்கால உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை. விசாரணை மார்ச் 27-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

    அதன்படி இவ்வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, பராமரிப்பு பணிக்காக ஆலையை அனுமதிக்கும்படி வேதாந்தா தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. மேலும், இவ்வழக்கில் வைகோவை சேர்க்கக்கூடாது என்றும் வாதிடப்பட்டது.



    ஆனால், வேதாந்தா நிறுவனத்தின் கோரிக்கையை நிராகரித்த உயர்நீதிமன்றம், பராமரிப்பு பணிக்காக ஸ்டெர்லைட் ஆலை திறக்க அனுமதிக்கும்படி உத்தரவிட முடியாது என தெரிவித்தது. மேலும், ஆலையை மூடிய பின்னர் அப்பகுதியில் சுற்றுச்சூழல் மற்றும் குடிநீரின் தரம் உயர்ந்துள்ளதா? என ஆய்வு செய்யவும் உத்தரவிட்டு, விசாரணையை ஏப்ரல் 23-ம் தேதிக்கு ஒத்திவைத்தது. #Sterlite #SterliteCase #MadrasHighCourt

    திருமணம் செய்து வைக்க பெற்றோர் மறுத்ததால் ஆட்டோ டிரைவர் ‘பிரேக் ஆயில்’ குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

    மதுரை:

    மதுரை மேலூர் அருகேயுள்ள கொட்டக்குடி கக்கன்ஜி காலனியைச் சேர்ந்த தெய்வேந்திரன் மகன் சரவணன் (வயது 25). ஆட்டோ டிரைவர். இவர் அந்தப்பகுதியில் வசிக்கும் ஒரு பெண்ணை காதலித்து வந்தார்.

    இந்த நிலையில் சரவணன் தனது பெற்றோரிடம் ‘நான் ஒரு பெண்ணை காதலிக்கிறேன். அவளை எனக்கு திருமணம் செய்து வையுங்கள்’ என்று கேட்டார்.

    அதற்கு தெய்வேந்திரன் ‘அண்ணனுக்கே இன்னும் திருமணமாகவில்லை, உன் தங்கையும் திருமண வயதில் உள்ளார். எனவே 3 ஆண்டு காத்திரு’ என்று அறிவுரை கூறினார்.

    இதனால் வாழ்க்கையில் விரக்தியடைந்த சரவணன் ‘பிரேக் ஆயில்’ குடித்து மயங்கி விழுந்தார்.

    உறவினர்கள் அவரை மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி சரவணன் பரிதாபமாக இறந்தார்.

    இது தொடர்பாக தெய்வேந்திரன் மேலூர் போலீ சில் புகார் செய்தார். சப்-இன்ஸ் பெக்டர் அழகர்சாமி வழக்குப்பதிவு செய்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்.

    திருமணத்துக்கு மறுத்ததால் காதலன் வீட்டு முன்பு இளம்பெண் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார்.
    கடமலைக்குண்டு:

    நெல்லை மாவட்டம் கூடங்குளம் அருகே உள்ள பொன்னார் கிராமத்தை சேர்ந்தவர் நந்தினி (வயது 25). இவர், ஈரோடு மாவட்டத்தில் உள்ள தனியார் கல்லூரியில் படித்தார். அதே கல்லூரியில், தேனி மாவட்டம் கடமலைக்குண்டு அருகே குமணன்தொழு கிராமத்தை சேர்ந்த ரஞ்சித் (27) என்பவரும் படித்தார்.

    இவர்கள் 2 பேருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு காதலித்து வந்தனர். கல்லூரி படிப்பு முடிந்து 2 பேரும் அவரவர் கிராமங்களுக்கு சென்று விட்டனர். இந்தநிலையில் குமணன்தொழு கிராமத்தில் உள்ள ரஞ்சித் வீட்டுக்கு நந்தினி வந்தார். ரஞ்சித்தை சந்தித்த அவர், தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்தினார்.

    அப்போது, தனது தங்கை திருமணம் நடைபெற இருப்பதாகவும் அது முடிந்த பிறகு திருமணம் செய்து கொள்வதாகவும் ரஞ்சித் தெரிவித்தார். ஆனால் இதனை நந்தினி ஏற்றுக்கொள்ளவில்லை. தன்னை திருமணம் செய்ய ரஞ்சித் மறுப்பதாக நந்தினி நினைத்தார். இதனையடுத்து, தான் கொண்டு வந்த பூச்சி மருந்தை (விஷம்) ரஞ்சித் வீட்டின் முன்பு வைத்து நந்தினி குடித்தார். சிறிதுநேரத்தில் அவர் மயங்கி கீழே விழுந்தார். இதனைக்கண்ட அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக கடமலைக்குண்டுவில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

    இது குறித்து நந்தினி மீது தற்கொலைக்கு முயன்றதாக மயிலாடும்பாறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    காதலை பெண் ஏற்காததால் மனமுடைந்த வாலிபர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    வெள்ளகோவில்:

    சீர்காழி திருநன்னியூரை சேர்ந்தவர் செல்வக்குமார். இவரது மகன் மணிகண்டன் (வயது 19). இவர் வெள்ளகோவிலில் உள்ள ஒரு பிஸ்கெட் கம்பெனியில் தங்கி வேலை பார்த்து வந்தார். அப்போது உடன் வேலை செய்த ஒரு பெண்ணை ஒருதலையாக காதலித்து வந்தார்.

    ஒரு கட்டத்தில் தனது காதலை இளம்பெண்ணிடம் கூறினார். ஆனால் அந்த பெண் வாலிபரின் காதலை ஏற்கவில்லை. இதனால் விரக்தியடைந்த மணிகண்டன் கம்பெனியில் உள்ள வேப்ப மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இது குறித்து தகவல் கிடைத்ததும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து வெள்ளகோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    சேலம் அருகே உல்லாசத்துக்கு மறுத்த மனைவியை கீழே தள்ளி அவரது கழுத்தில் காலை வைத்து மிதித்து கொன்ற கணவரின் செயல் போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

    சேலம்:

    சேலம் மாவட்டம் வீராணம் அருகே உள்ள பள்ளிப்பட்டி, அண்ணாநகர் காலனியை சேர்ந்தவர் முருகன். இவரது மகன் மாதேஸ் (வயது 27). கம்பி கட்டும் தொழிலாளி. இவருக்கு மது குடிக்கும் பழக்கம் உண்டு.

    இவருக்கு கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு சேலம் இரும்பாலை தளவாய்ப்பட்டியை சேர்ந்த வடிவேல்- பச்சியம்மாள் தம்பதியின் மகள் சசிகலா(23) என்பவருடன் திருமணம் நடந்தது.

    கடந்த ஆண்டு கர்ப்பமான சசிகலா 7-வது மாதத்தில் பிரசவத்திற்காக தனது தாய் வீட்டுக்கு சென்றார். 7 மாதங்களுக்கு முன்பு சசிகலா அறுவை சிகிச்சை மூலம் அழகான பெண் குழந்தையை பெற்றெடுத்தார். அறுவை சிகிச்சை செய்து கொண்டதால் பூரண குணம் அடையும் வரை சசிகலா தனது கணவர் வீட்டுக்கு செல்லாமல் தொடர்ந்து தாய் வீட்டிலேயே வசித்து வந்தார்.

    நேற்று மாலை தளவாய்ப்பட்டியில் உள்ள மாமனார் வீட்டிற்கு வந்த மாதேஸ் திடீரென கதவை பூட்டி சசிகலாவை கொடூரமாக கொலை செய்தார்.

    இந்த கொடூர கொலை சம்பவம் குறித்து இரும்பாலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் மாதேஸ் தனது மனைவி சசிகலாவை ஏன்? எதற்காக கொலை செய்தார்? என்பது குறித்து பரபரப்பு தகவல்கள் வெளியாகின. அதன் விபரம் வருமாறு:-

    மாதேஸ் தனது குழந்தையை பார்க்க வீட்டுக்கு வர இருப்பதாக நேற்று சசிகலாவிடம் தெரிவித்தார். இதையொட்டி அவருக்கு விருந்து அளிக்கும் வகையில் குடும்பத்தினர் இறைச்சி எடுத்து சமைத்து வைத்தனர்.

    நேற்று மாலையில் மாதேஸ் தளவாய்பட்டியில் உள்ள தனது மாமனார் வீட்டிற்கு வந்தார். அப்போது வீட்டில் சசிகலா மற்றும் அவரது தாயார் பச்சியம்மாள் மற்றும் உறவினர்கள் இருந்தனர்.

    வீட்டிற்கு வந்த மாதேஸ், எனது குழந்தை எங்கே இருக்கிறது? என்ன பண்ணுகிறது? என கேட்டார். அதற்கு அவர்கள் குழந்தை வீட்டுக்குள் தூங்கிக் கொண்டிருக்கிறது என்று கூறினார்கள்.

    இதையடுத்து மாதேஸ் வீட்டின் வெளியே போடப்பட்டிருந்த ஒரு நாற்காழியில் அமர்ந்திருந்தார். பின்னர் 5 நிமிடங்கள் கழித்து சசிகலாவிடம் சாப்பாடு போடுமாறு கூறினார். சரி என்று அவர் சொல்லிவிட்டு சாப்பாடு எடுப்பதற்காக சமையலறைக்கு போனார். அப்போது மாதேஸ் அவரது பின்னால் சென்றார்.

    இதனால் மாமியார் பச்சியம்மாள் மற்றும் உறவினர்கள் நிறைய நாட்கள் கழித்து மருமகன் வீட்டுக்கு வந்திருப்பதால் இடைஞ்சலாக இருக்கக்கூடாது என கருதி அவர்கள் அனைவரும் வீட்டின் வெளியே போய் உட்கார்த்திருந்தனர். கணவன், மனைவி இருவரும் வீட்டுக்குள் அமர்ந்து உணவு சாப்பிட்டுக் கொண்டு இருப்பதாக நினைத்துக் கொண்டிருந்தனர்.

    ஆனால் சசிகலாவின் பின்னால் சென்ற மாதேஸ் திடீரென கதவை உள் பக்கமாக தாழ்ப்பாள் போட்டு கதவை பூட்டினார். பின்னர் சசிகலாவை படுக்கை அறைக்குள் தள்ளி உல்லாசத்துக்கு வருமாறு வற்புறுத்தினார். அதற்கு சசிகலா மறுத்தார். தான் அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பெற்றுள்ளேன். அதனால் பூரண குணமடையும் வரை உல்லாசத்துக்கு வரமுடியாது என கூறினார்.

    இதனால் ஆத்திரம் அடைந்த மாதேஸ் என்கூட உல்லாசத்துக்கு வராததால் நீ உயிரோடு இருக்கக்கூடாது என தெரிவித்து சசிகலாவை கீழே தள்ளி அவரது கழுத்தில் காலை வைத்து மிதித்தார்.

    இதற்கிடையே வீட்டுக்குள் இருந்து ரொம்ப நேரமாக சத்தம் எதுவும் வராததால் சந்தேகம் அடைந்த பச்சியம்மாள் ஜன்னல் வழியாக எட்டி பார்த்தார். அங்கு மகளின் கழுத்தில் காலை வைத்து மாதேஸ் மிதித்து கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்து கதறி அழுதார். அவர், எனது மகளை விட்டு விடு என கெஞ்சினார். ஆனாலும் மாதேஸ் கேட்கவில்லை. மிருக தனமாக காலால் மிதித்து, கழுத்தை இறுக்கினார்.

    உடனே பச்சியம்மாள் எனது மகளை கொலை செய்கிறான். யாராவது ஓடி வாருங்கன் என கூச்சல் போட்டார். ஆனால், அதற்குள் மாதேஸ், சசிகலாவை கொலை செய்து விட்டார்.

    உடனடியாக வீட்டின் வெளியே இருந்த உறவினர்கள் கதவை அடைத்துக் கொண்டு உள்ளே புகுந்தனர். அங்கு படுக்கை அறையில் சசிகலா பிணமாக கிடந்தார். உடனே மாதேசை கட்டி வைத்து சரமாரியாக தாக்கினர். அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டியது.

    இவ்வாறு போலீசார் விசாரணையில் தெரியவந்தது.

    திருப்பூரில் உல்லாசத்துக்கு மறுத்த மனைவியை குத்தியால் குத்தி கொன்ற கணவரை போலீசார் கைது செய்தனர்.

    திருப்பூர்:

    திருப்பூர் கே.வி.ஆர். நகர் அருகே உள்ள அண்ணா நகரை சேர்ந்தவர் மூர்த்தி. இவரது மனைவி கோமதி (வயது 30). இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். கணவன்-மனைவி இருவரும் செல்வம் நகரில் உள்ள பிரிண்டிங் கம்பெனியில் ஊழியராக வேலை பார்த்து வந்தனர்.

    வேலைக்கு செல்லும் மூர்த்தி தினசரி மது குடித்து விட்டு வீட்டுக்கு வருவார். இதனை கோமதி கண்டித்தார். இதனால் அடிக்கடி கணவன்-மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டு வந்தது.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு மூர்த்தி குடித்து விட்டு வீட்டுக்கு வந்து மனைவியிடம் தகராறு செய்தார். இதனால் மனவேதனை அடைந்த கோமதி கணவரிடம் கோபித்துக்கொண்டு அருகே உள்ள தாய் ஜோதி வீட்டுக்கு குழந்தைகளை அழைத்து சென்று வசித்து வந்தார். பின்னர் மூர்த்தி மனைவியை சந்தித்து இனிமேல் குடிக்க மாட்டேன் என கூறினார். எனவே கோமதி தனது கணவரை தாய் வீட்டில் சேர்ந்து வசிக்க சம்மதித்தார்.

    நேற்று வேலைக்கு சென்ற மூர்த்தி நேற்று இரவு மது குடித்து விட்டு வீட்டுக்கு வந்தார். பின்னர் நள்ளிரவு கோமதியை உல்லாசத்துக்கு அழைத்துள்ளார். அவர் வர மறுத்து விட்டார். இதனால் 2 பேருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறியது.

    இதில் ஆத்திரம் அடைந்த மூர்த்தி வீட்டில் இருந்த கத்தியை எடுத்து கோமதியின் வயிறு, மார்பு பகுதியில் சரமாரியாக குத்தினார்.

    இதில் நிலைகுலைந்த அவர் ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்தார். மகளின் சத்தம் கேட்டு வந்த கோமதியின் தாய் ஜோதி மூர்த்தியை தடுக்க முயன்றார். அவரையும் மூர்த்தி கத்தியால் சரமாரியாக குத்தினார். பின்னர் அங்கு இருந்து தப்பி ஓடினார்.

    சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய கோமதி, ஜோதி ஆகியோரை மீட்டு திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே கோமதி பரிதாபமாக இறந்தார்.

    படுகாயம் அடைந்த ஜோதிக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

    இது குறித்து திருப்பூர் மத்திய போலீசார் வழக்குப்பதிவு செய்து மனைவியை கத்தியால் குத்தி கொலை செய்து விட்டு தலைமறைவான மூர்த்தியை கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    காதலிக்க மறுத்த பள்ளி மாணவியை கன்னத்தில் பளார் அறை விட்ட என்ஜினீயர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

    சேலம்:

    சேலம் ஜாகீர் அம்மா பாளையம் பகுதியில் உள்ள அரசு பள்ளியில் மாணவி ஒருவர் எஸ்.எஸ்.எல்.சி. படித்து வருகிறார். நேற்று காலை சிறப்பு வகுப்பிற்காக மாணவி பள்ளிக்கு சென்று கொண்டிருந்தார்.

    அப்போது மாணவியை பின்தொடர்ந்து வந்த வாலிபர் ஒருவர், பள்ளி அருகே நடுரோட்டில் வழிமறித்து தன்னை காதலிக்குமாறு மாணவியிடம் வற்புறுத்தினார். இதை சற்றும் எதிர்பாராத மாணவி அதிர்ச்சி அடைந்தார். ‘நான் யாரையும் காதலிக்க மாட்டேன்’ என தெரிவித்தார்.

    இதைக்கேட்டு, அந்த வாலிபர் ஆத்திரம் அடைந்து மாணவியின் கன்னத்தில் ‘பளார்’ என அறைந்தார். மேலும், அந்த மாணவியை அடித்து விட்டு அங்கிருந்து ஓடிவிட்டார்.

    பின்னர் அழுது கொண்டே மாணவி வீட்டிற்கு சென்று நடந்த சம்பவம் குறித்து பெற்றோரிடம் கூறினார். தாயார், பள்ளி சீருடையில் இருந்த மகளை அழைத்துக் கொண்டு நேராக சேலம் போலீஸ் கமி‌ஷனர் அலுவலகத்திற்கு வந்து துணை கமி‌ஷனர் தங்கதுரையை சந்தித்து, கண்ணீர் மல்க, மகளுக்கு நேர்ந்த சம்பவம் குறித்து புகார் தெரிவித்தார்.

    போலீஸ் துணை கமி‌ஷனர் தங்கதுரை, மாணவியை அடித்த வாலிபர் யார்? என்பதை கண்டுபிடித்து, அவரை உடனடியாக கைது செய்யும்படி சூரமங்கலம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்துக்கு உத்தரவிட்டார்.

    இதையடுத்து போலீசார் விசாரணை நடத்தியதில், மாணவியின் கண்ணத்தில் அறைந்தவர் சேலம், நரசோதிப்பட்டி, காமராஜர் காலனியை சேர்ந்த 17 வயது வாலிபர் என்பது தெரியவந்தது. அவரை பிடித்து போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.

    விசாரணையில், அந்த வாலிபர் பற்றி பரபரப்பு தகவல்கள் கிடைத்துள்ளன. அதன் விபரம் வருமாறு:-

    வாலிபரின் தந்தை கட்டிடங்களுக்கு டைல்ஸ் ஒட்டும் கூலிவேலை செய்து வருகிறார். அவரது தாயும் கூலி தொழில் செய்து வருகிறார். பெற்றோர் அவரை சேலம் மாவட்டம் மல்லூர் பகுதியில் உள்ள ஒரு தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் டிப்ளமோ மெக்கானிக்கல் என்ஜினீயரிங் படிப்பில் சேர்த்து விட்டனர்.

    அங்கு முதலாம் ஆண்டு வரை கல்லூரிக்கு சென்று படித்தார். அதன் பிறகு படிப்பில் கவனம் செலுத்தாமல் சுற்றிதிரிந்தார். 2-ம் வருடம் ஒரு சில மாதங்கள் மட்டுமே கல்லூரிக்கு சென்ற அவர் படிப்பை இடையில் நிறுத்தி விட்டு, வீட்டில் இருந்து வருகிறார். வேலைக்கு எதுவும் செல்லாமல், ஊரில் நண்பர்களுடன் ஜாலியாக சுற்றி திரிந்து வந்தார்.

    இந்தநிலையில் தான் 10-ம் வகுப்பு மாணவியை கடந்த சில நாட்களாக பின் தொடர்ந்து தன்னை காதலிக்குமாறு வற்புறுத்தியதாக கூறப்படுகிறது. அதற்கு அவர் மறுக்கவே தாக்கியுள்ளார் என்பது தெரியவந்தது.

    போலீசார், அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்து கைது செய்து, கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். வழக்கை விசாரித்த மாஜிஸ்திரேட், அந்த வாலிபரை சேலம் சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைக்க உத்தரவிட்டார். அதன்படி போலீசார், அழைத்துச் சென்று வாலிபரை சிறுவர் சீர்திருத்தப்பள்ளியில் அடைத்தனர்.

    ×