search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "engineer beating"

    காதலிக்க மறுத்த பள்ளி மாணவியை கன்னத்தில் பளார் அறை விட்ட என்ஜினீயர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

    சேலம்:

    சேலம் ஜாகீர் அம்மா பாளையம் பகுதியில் உள்ள அரசு பள்ளியில் மாணவி ஒருவர் எஸ்.எஸ்.எல்.சி. படித்து வருகிறார். நேற்று காலை சிறப்பு வகுப்பிற்காக மாணவி பள்ளிக்கு சென்று கொண்டிருந்தார்.

    அப்போது மாணவியை பின்தொடர்ந்து வந்த வாலிபர் ஒருவர், பள்ளி அருகே நடுரோட்டில் வழிமறித்து தன்னை காதலிக்குமாறு மாணவியிடம் வற்புறுத்தினார். இதை சற்றும் எதிர்பாராத மாணவி அதிர்ச்சி அடைந்தார். ‘நான் யாரையும் காதலிக்க மாட்டேன்’ என தெரிவித்தார்.

    இதைக்கேட்டு, அந்த வாலிபர் ஆத்திரம் அடைந்து மாணவியின் கன்னத்தில் ‘பளார்’ என அறைந்தார். மேலும், அந்த மாணவியை அடித்து விட்டு அங்கிருந்து ஓடிவிட்டார்.

    பின்னர் அழுது கொண்டே மாணவி வீட்டிற்கு சென்று நடந்த சம்பவம் குறித்து பெற்றோரிடம் கூறினார். தாயார், பள்ளி சீருடையில் இருந்த மகளை அழைத்துக் கொண்டு நேராக சேலம் போலீஸ் கமி‌ஷனர் அலுவலகத்திற்கு வந்து துணை கமி‌ஷனர் தங்கதுரையை சந்தித்து, கண்ணீர் மல்க, மகளுக்கு நேர்ந்த சம்பவம் குறித்து புகார் தெரிவித்தார்.

    போலீஸ் துணை கமி‌ஷனர் தங்கதுரை, மாணவியை அடித்த வாலிபர் யார்? என்பதை கண்டுபிடித்து, அவரை உடனடியாக கைது செய்யும்படி சூரமங்கலம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்துக்கு உத்தரவிட்டார்.

    இதையடுத்து போலீசார் விசாரணை நடத்தியதில், மாணவியின் கண்ணத்தில் அறைந்தவர் சேலம், நரசோதிப்பட்டி, காமராஜர் காலனியை சேர்ந்த 17 வயது வாலிபர் என்பது தெரியவந்தது. அவரை பிடித்து போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.

    விசாரணையில், அந்த வாலிபர் பற்றி பரபரப்பு தகவல்கள் கிடைத்துள்ளன. அதன் விபரம் வருமாறு:-

    வாலிபரின் தந்தை கட்டிடங்களுக்கு டைல்ஸ் ஒட்டும் கூலிவேலை செய்து வருகிறார். அவரது தாயும் கூலி தொழில் செய்து வருகிறார். பெற்றோர் அவரை சேலம் மாவட்டம் மல்லூர் பகுதியில் உள்ள ஒரு தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் டிப்ளமோ மெக்கானிக்கல் என்ஜினீயரிங் படிப்பில் சேர்த்து விட்டனர்.

    அங்கு முதலாம் ஆண்டு வரை கல்லூரிக்கு சென்று படித்தார். அதன் பிறகு படிப்பில் கவனம் செலுத்தாமல் சுற்றிதிரிந்தார். 2-ம் வருடம் ஒரு சில மாதங்கள் மட்டுமே கல்லூரிக்கு சென்ற அவர் படிப்பை இடையில் நிறுத்தி விட்டு, வீட்டில் இருந்து வருகிறார். வேலைக்கு எதுவும் செல்லாமல், ஊரில் நண்பர்களுடன் ஜாலியாக சுற்றி திரிந்து வந்தார்.

    இந்தநிலையில் தான் 10-ம் வகுப்பு மாணவியை கடந்த சில நாட்களாக பின் தொடர்ந்து தன்னை காதலிக்குமாறு வற்புறுத்தியதாக கூறப்படுகிறது. அதற்கு அவர் மறுக்கவே தாக்கியுள்ளார் என்பது தெரியவந்தது.

    போலீசார், அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்து கைது செய்து, கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். வழக்கை விசாரித்த மாஜிஸ்திரேட், அந்த வாலிபரை சேலம் சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைக்க உத்தரவிட்டார். அதன்படி போலீசார், அழைத்துச் சென்று வாலிபரை சிறுவர் சீர்திருத்தப்பள்ளியில் அடைத்தனர்.

    ×