என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Supreme Court"

    • சிறுவயது மாணவர்களுக்கு இத்தகைய உணர்வுப்பூர்வமான விஷயங்களைக் கற்பிப்பது முறையானது அல்ல
    • மத்திய அரசு இதுதொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் மன்னிப்பு கோரியது.

    8ஆம் வகுப்பு (CBSE) சமூக அறிவியல் பாடப்புத்தகத்தில் "நீதித்துறையின் பங்கு" என்ற பாடத்தில், நீதித்துறையில் நிலவும் ஊழல் குறித்த ஒரு புதிய பகுதி சமீபத்தில் சேர்க்கப்பட்டது. இது குறித்து தற்போது பெரும் சர்ச்சை எழுந்துள்ளது. இந்த விவகாரத்தை உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி சூர்யகாந்த் தலைமையிலான அமர்வு தானாக முன்வந்து விசாரித்தது.

    நீதித்துறையை இழிவுபடுத்தும் எத்தகைய செயலையும் அனுமதிக்க முடியாது என்று நீதிமன்றம் எச்சரித்ததைத் தொடர்ந்து, அந்தப் பாடப்பகுதியை நீக்க மத்திய கல்வி அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. தற்போது அந்தப் புத்தகங்கள் சந்தையிலிருந்து திரும்பப் பெறப்பட்டு வருகின்றன. மேலும் இன்று மத்திய அரசு இதுதொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் மன்னிப்பு கோரியது.

    இந்நிலையில் செவ்வாய்க்கிழமையன்று நடந்த அமைச்சரவை கூட்டத்தில் இதுதொடர்பாக பிரதமர் மோடி அதிருப்தி தெரிவித்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளது. "நீதித்துறை ஊழல் பற்றி 8 ஆம் வகுப்பு குழந்தைகளுக்கு நாம் என்ன கற்பிக்கிறோம்?" என கேள்வி எழுப்பியதாக கூறப்படுகிறது. இவ்வளவு சிறிய வயது மாணவர்களுக்கு இத்தகைய உணர்வுப்பூர்வமான விஷயங்களைக் கற்பிப்பது முறையானது அல்ல என்பதையும் அவர் சுட்டிக்காட்டியதாக கூறப்படுகிறது.

    மேலும் இந்தத் தவறுக்குக் காரணமானவர்கள் யார் என்பதைக் கண்டறிந்து, அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று பிரதமர் வலியுறுத்தியதாகவும் கூறப்படுகிறது. 


    • தனது ஜாமீன் நிபந்தனைகளை தளர்த்த கோரி ராஜேந்திர பாலாஜி வழக்கு தொடர்ந்தார்.
    • ராஜேந்திர பாலாஜியின் மனுவை சுப்ரீம் கோர்ட்டு ஏற்றுக் கொண்டது.

    புதுடெல்லி:

    ஆவின் நிறுவனத்தில் வேலை வாங்கி தருவதாக மோசடி செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு ஜாமீன் வழங்கப்பட்டது. இந்த நிலையில் தனது ஜாமீன் நிபந்தனைகளை தளர்த்த கோரி ராஜேந்திர பாலாஜி வழக்கு தொடர்ந்தார்.

    அந்த மனுவில், 'பாஸ்போர்ட்டை மீண்டும் வழங்க வேண்டும், வெளிநாடு செல்ல வேண்டும் என்றால் ஒவ்வொரு முறையும் ஐகோர்ட்டை நாடி அனுமதி பெற வேண்டும் என்ற நிபந்தனையை தளர்த்த வேண்டும்' என்று ராஜேந்திர பாலாஜி கோரி இருந்தார்.

    இந்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது ராஜேந்திர பாலாஜியின் மனுவை சுப்ரீம் கோர்ட்டு ஏற்றுக் கொண்டது.

    மேலும் ராஜேந்திர பாலாஜியின் பாஸ்போர்ட்டை அவரிடம் மீண்டும் ஒப்படைக்க சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. அதே போன்று அவர் வெளிநாடு செல்ல வேண்டுமென்றால் ஏற்கனவே ஐகோர்ட்டில் அனுமதி பெற வேண்டி இருந்தது. ஆனால் இனிமேல் அவர் மாவட்ட நீதிமன்றத்திலேயே அனுமதி பெற்று வெளிநாடு செல்லலாம் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

    • எளிய மக்களை விட, பணக்காரர்கள் மற்றும் படித்தவர்களின் பங்கேற்பு தான் வாக்குப்பதிவில் குறைவு.
    • ஒரே ஒரு வேட்பாளர் மட்டுமே இருக்கும் இடங்களில் வாக்காளர்கள் 'நோட்டா' விருப்பத்தைப் பயன்படுத்த அனுமதிக்க வேண்டும்

    உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவில் தேர்தலில் 100 சதவீதம் வாக்குப்பதிவு என்பது எட்டாக்கனியாகவே இருந்து வருகிறது.

    இந்நிலையில் விலைமதிப்பற்ற வாக்குரிமையைப் பயன்படுத்த அதிக மக்கள் வாக்குச்சாவடிக்கு வர வேண்டுமென்றால், வாக்களிப்பதைக் கட்டாயமாக்க வேண்டியது அவசியம் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

    தேர்தலில் போட்டியிட ஒரே ஒரு வேட்பாளர் மட்டுமே இருந்தாலும் வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்று கோரிய மனுக்களை விசாரித்தபோது, தலைமை நீதிபதி சூர்யகாந்த் மற்றும் நீதிபதி ஜாய்மால்யா பாக்ஜி அடங்கிய அமர்வு இந்த கருத்தைத் தெரிவித்தது.

    மக்கள் வாக்களிப்பதை உறுதி செய்ய, கடுமையானதாக இல்லாவிட்டாலும், ஒரு கட்டாய நடைமுறை இருக்க வேண்டும் என்று தலைமை நீதிபதி சூர்யகாந்த் கூறினார்.

    எளிய மக்களை விட, பணக்காரர்கள் மற்றும் படித்தவர்களின் பங்கேற்பு தான் வாக்குப்பதிவில் குறைவாக இருப்பதாக தனது அனுபவத்தில் உணர்வதாக நீதிபதி பாக்ஜி குறிப்பிட்டார்.

    கிராமங்களில் வாக்குப்பதிவு நாள் ஒரு திருவிழாவாகக் கொண்டாடப்படுகிறது. பெண்கள் வீட்டு வேலைகளை விட்டுவிட்டு, குழுவாகப் பாட்டுப் பாடியும் ஆடியும் வாக்குச்சாவடிகளுக்கு வருவதாக அவர் சுட்டிக்காட்டினார்.

    ஒரே ஒரு வேட்பாளர் மட்டுமே இருக்கும் இடங்களில் வாக்காளர்கள் 'நோட்டா' விருப்பத்தைப் பயன்படுத்த அனுமதிக்க வேண்டும் என்ற மனுதாரரின் வாதத்திற்கு பதிலளித்த நீதிமன்றம், "நோட்டா முறையினால் வாக்குப்பதிவு சதவீதத்திலோ அல்லது வேட்பாளர்களின் தரத்திலோ முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதா?" என்று கேள்வி எழுப்பியது.

    ஒரே ஒரு வேட்பாளர் போட்டியிடும் இடத்தில், அந்த வேட்பாளருக்கு நோட்டாவை விடக் குறைவான வாக்குகளே கிடைத்தால், அந்தத் தேர்தலை ரத்து செய்ய வேண்டும் என்பதே மனுதாரரின் கோரிக்கையாக இருந்தது. இந்த மனு மீதான விசாரணை மீண்டும் மற்றொரு தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.  

    • தேர்தலுக்கு முன்பு இலவச வாக்குறுதி திட்டங்களை அரசியல் கட்சிகள் அறிவிப்பதால் மாநில அரசுக்கு நிதிச்சுமை ஏற்படுகிறது.
    • இதுபோன்ற அறிவிப்புகளை தடுக்க தேர்தல் நடத்தை விதிகளை திருத்த வேண்டும்.

    புதுடெல்லி:

    தமிழக சட்டசபை தேர்தலுக்கு முன்பு இலவச வாக்குறுதி திட்டங்களை அரசியல் கட்சிகள் அறிவிப்பதற்கு தடை விதிக்க உத்தரவிடக்கோரி சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.

    இதுதொடர்பாக மதுரையை சேர்ந்த கே.கே.ரமேஷ் சார்பில் வக்கீல் ஜெய சுகின், நரேந்தர் குமார் வர்மா ஆகியோர் தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவில் கூறி இருப்பதாவது:-

    தேர்தலுக்கு முன்பு இலவச வாக்குறுதி திட்டங்களை அரசியல் கட்சிகள் அறிவிப்பதால் மாநில அரசுக்கு நிதிச்சுமை ஏற்படுகிறது. இலவச வாக்குறுதி திட்டங்களால் ஏற்படும் நிதிசார் பாதிப்புகள், அதற்கான நிதி முதலீடு குறித்து அரசியல் கட்சிகள் தெரிவிக்க வேண்டும்.

    எனவே, தமிழக சட்டசபை தேர்தலுக்கு முன்பு இலவச வாக்குறுதி திட்டங்களை அரசியல் கட்சிகள் அறிவிப்பதற்கு தடை விதிக்க மத்திய அரசுக்கும், தேர்தல் கமிஷனுக்கும் உத்தரவிட வேண்டும். இதுபோன்ற அறிவிப்புகளை தடுக்க தேர்தல் நடத்தை விதிகளை திருத்த வேண்டும். இலவச வாக்குறுதி திட்டங்களின் சாத்தியக் கூறுகளை, நிதி ஆயோக், ரிசர்வ் வங்கி போன்றவற்றின் நிபுணர்களை கொண்ட சுதந்திரமான குழுவை கொண்டு ஆராய வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    இந்த பொதுநல மனுவை சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி சூர்யகாந்த், நீதிபதி ஜோய்மால்யா பக்சி ஆகியோர் அடங்கிய அமர்வு இன்று விசாரித்தது.

    வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி சூர்யகாந்த், 'கேரள மாநிலத்தில் தேர்தல் வருகிறது என்பதால் இதுபோன்ற ஒரு மனுவை தொடர்ந்தார்கள். தற்போது நீங்கள் தமிழ்நாட்டுக்கு தேர்தல் வருகிறது என்று இந்த மனுவை தாக்கல் செய்கிறீர்கள். எனவே இதை தற்போது ஏற்க முடியாது. தேர்தல் முடிந்த பின்பாக வழக்கை எடுத்து விசாரிக்கலாம். தற்போது அவசரமாக விசாரிக்க வேண்டிய அவசியம் இல்லை' என்று தெரிவித்து வழக்கை ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

    • தேசப்பற்றோ, அரசியலமைப்பின் மீது விசுவாசமோ இல்லை.
    • வர்கள் அந்நிய சக்திகளின் விருப்பங்களுக்கு கட்டுப்படுகிறார்கள்.

    இந்தியா, சீனா, கனடா உள்ளிட்ட நாடுகள் மீது டிரம்ப் அரசு விதித்த கூடுதல் இறக்குதி வரிகள் செல்லாது என்று அமெரிக்க உச்ச நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது. இதன் மூலம் இந்தியா - அமெரிக்கா இடைக்கால வர்த்தக ஒப்பந்தமும் சிக்கலை சந்தித்துள்ளது. 

    தலைமை நீதிபதி ஜான் ராபர்ட்ஸ் தலைமையிலான 9 பேர் அடங்கிய அமர்வு, வரி விதிப்பு தொடர்பான முடிவுகளை எடுப்பதில் அமெரிக்க நாடாளுமன்றத்தை அதிபரால் மீற முடியாது.

    1974ஆம் ஆண்டு வர்த்தக சட்டத்தின் கீழ் அவசர சூழலை பயன்படுத்தி இந்த வரிகளை விதிக்க வேண்டிய அவசியம் இப்போது இல்லை என்று தெரிவித்தது.

    மேலும், வரி விதிப்பானது தேசிய பாதுகாப்பு தொடர்பான அவசர நடவடிக்கை என்ற டிரம்ப் தரப்பு வாதத்தை நீதிமன்றம் ஏற்க மறுத்துவிட்டது. 

    தீர்ப்பு வெளியான சில மணி நேரங்களிலேயே வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களைச் சந்தித்த டிரம்ப், நீதிபதிகளைக் கடுமையாக விமர்சித்தார்.

    டிரம்ப் பேசியதாவது, நாட்டிற்கு நன்மையான முடிவை எடுக்க துணிச்சல் இல்லாத இந்த நீதிபதிகள் ஒரு அவமானம். அவர்கள் தங்களின் குடும்பத்திற்கே தலைகுனிவை ஏற்படுத்திவிட்டனர்.

    தீர்ப்பளித்த நீதிபதிகள் பெயரளிவில் தான் குடியரசுவாதிகள், ஆனால் தீவிர இடதுசாரி ஜனநாயகக் கட்சியினரின் வளர்ப்பு நாய்களாக மாறிவிட்டனர். அவர்களுக்கு தேசப்பற்றோ, அரசியலமைப்பின் மீது விசுவாசமோ இல்லை. 

    நான் கோடிக்கணக்கான வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றேன். ஆனால் இந்த நீதிபதிகள் முட்டாள்கள். அவர்கள் அந்நிய சக்திகளின் விருப்பங்களுக்கு கட்டுப்படுகிறார்கள்.

    அதேநேரம் ஒன்பது பேர் கொண்ட அமர்வில் எனது கொள்கைக்கு ஆதரவாக நின்ற நீதிபதிகள் தாமஸ், அலிட்டோ மற்றும் கவனோ ஆகியோரை வலிமையும் துணிச்சலும் மிக்கவர்கள்" என்று தெரிவித்தார்.

    தீர்ப்பளித்த நீதிபதிகள் பலர் முன்னர் டிரம்ப் நிர்வாகத்தால் நியமிக்கப்பட்டிருந்ததும் அவர்கள் தற்போது டிரம்ப்புக்கு எதிராக தீர்பளித்துள்ளதே டிரம்ப் கோபத்தை மேலும் தூண்டியுள்ளது. 

    இதற்கிடையே உச்ச நீதிமன்றமே தீர்ப்பளித்தாலும், தான் விதித்த வரிகள் தொடர்ந்து அமலில் இருக்கும் என்று டிரம்ப் பிடிவாதமாகக் கூறியுள்ளார்.

    அதேநேரம் அனைத்து நாடுகளுக்கும் தாற்காலிகளமாக 10 சதவீத கூடுதல் வரியையும் விதிப்பதாக டிரம்ப் அறிவித்துள்ளார். 

    • மக்களை தீவிரவாதிகள் போலத் தேர்தல் ஆணையம் நடத்துகிறது.
    • சுமார் 58 லட்சம் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளது.

    விரைவில் தேர்தலை எதிர்கொள்ளும், தமிழ்நாடு, மேற்கு வங்கம், கேரளா உள்ளிட்ட 12 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.

    தேர்தல் ஆணையம், ஆளும் மத்திய பாஜக அரசின் ஏவலின் பேரில் தேர்தலுக்கு முன்னனதாக அவசர அவசரமாக வாக்காளர்களை நீக்கி வருவதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.

    குறிப்பாக திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சி நடக்கும் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி இந்த எஸ்ஐஆர் பணிக்கு கடுமையான எதிர்ப்பு தெரிவித்து வருகிறார். எஸ்ஐஆர் பணிகளை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த அவர், வாதாடியும் உள்ளார்.

    மேலும், சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக வங்காள மக்கள் திட்டமிட்டு இலக்கு வைக்கப்படுவதாகவும் அவர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி வாதிட்டார்.

    வாக்காளர் பட்டியல் திருத்தம் என்ற பெயரில் மக்களைத் தீவிரவாதிகள் போலத் தேர்தல் ஆணையம் நடத்துகிறது என்றும் அவர் குற்றம் சாட்டினார்.

    சுமார் 58 லட்சம் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளதாகவும், 1.5 கோடிக்கும் அதிகமான வாக்காளர்கள் முரண்பாடு என்ற பெயரில் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

    இதற்கிடையே போதிய ஒத்துழைப்பு மாநில அரசிடம் இருந்து கிடைக்கவில்லை என்றும், அதிகாரிகள் மிரட்டப்படுவதாகவும் தேர்தல் ஆணையம் தனது தரப்பில் தெரிவித்தது.

    இந்நிலையில் இதுதொடர்பான மனுக்களை இன்று விசாரித்த உச்சநீதிமன்றம் இரு மேற்கு வங்கம்அரசுக்கும், தேர்தல் ஆணையத்துக்கும் இடையே நிலவும் நம்பிக்கை பற்றாக்குறையை சுட்டிக்காட்டி அதிரடி முடிவு ஒன்றை அறிவித்துள்ளது.

    அதாவது, வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு மற்றும் நீக்கம் தொடர்பான புகார்களை விசாரிக்க, தற்போதைய மற்றும் முன்னாள் கூடுதல் மாவட்ட நீதிபதிகளை தேர்தல் பதிவு அதிகாரிகளாக நியமிக்க கொல்கத்தா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

    நம்பிக்கை பற்றாக்குறையை ஒரு அசாதாரணமான சூழல் என்று கருதி உச்ச நீதிமன்றம் தனது சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

    இதுவரை சரிபார்க்கப்பட்ட வாக்காளர் பட்டியலை பிப்ரவரி 28 அன்று வெளியிடவும், விடுபட்டவர்கள், நியமிக்கப்பட்ட நீதிபதிகளால் விசாரிக்கப்பட்ட பின்னர் துணைப் பட்டியலில் சேர்க்கப்படுவார்கள் என்றும் உச்சநீதிமன்றம் தீர்ப்பில் தெரிவித்துள்ளது.  

    • பாபர் ஒரு 'படையெடுப்பாளர்'
    • ஒரு மசூதியைக் கட்டப்போவதாகத் திரிணாமுல் காங்கிரஸ் எம்.எல்.ஏ ஹுமாயூன் கபீர் அறிவித்ததை எதிர்த்து இந்த மனு தாக்கல்

    முகலாயப் பேரரசரான பாபரின் பெயரிலோ அல்லது பாபர் மசூதி என்ற பெயரிலோ மசூதிகள் கட்டுவதற்கு அல்லது மசூதிகளுக்கு பெயரிடுவதற்கு நாடு முழுவதும் தடைவிதிக்கக் கோரிய பொதுநல மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

    பாபர் ஒரு 'படையெடுப்பாளர்' என்றும், அவர் இந்துக்களை அடிமைகள் என்றும் குறிப்பிட்டதாகவும், அவர் பெயரில் மசூதிகள் கட்டுவது இந்துக்களின் உணர்வுகளைப் புண்படுத்தும் என்றும், இதுபோன்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.

    மேற்கு வங்கத்தின் முர்ஷிதாபாத் மாவட்டத்தில் பாபர் மசூதி போன்ற ஒரு மசூதியைக் கட்டப்போவதாகத் திரிணாமுல் காங்கிரஸ் எம்.எல்.ஏ ஹுமாயூன் கபீர் அறிவித்ததை எதிர்த்து இந்த மனு தாக்கல் செய்யப்பட்டது.

    இதனை விசாரணைக்கு ஏற்க மறுத்த நீதிபதிகள் விக்ரம் நாத் மற்றும் சந்தீப் மேத்தா ஆகியோர் அடங்கிய அமர்வு மனுவை தள்ளுபடி செய்தது. விசாரணைக்கு நீதிபதிகள் மறுத்ததைத் தொடர்ந்து, மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் மனுவைத் திரும்பப் பெற்றுக்கொண்டார். இதனால் இந்த மனு 'திரும்பப் பெறப்பட்டதாகக் கருதி தள்ளுபடி' செய்யப்பட்டது.

    • வசதி படைத்தவர்களுக்கே எந்த வகையான இலவசமும் முதலில் போய்ச் சேருகிறது.
    • ஏன் தேர்தல் நெருங்கும் வேலையில் திட்டங்கள் அறிவிக்கப்படுகின்றன?

    மின்சார திருத்த விதிகள் 2024 இன் விதி 23 ஐ எதிர்த்து தமிழ்நாடு மின் விநியோக நிறுவனம் தாக்கல் செய்த ரிட் மனுவை இந்திய தலைமை நீதிபதி சூர்யா காந்த், நீதிபதி ஜாய்மல்யா பாக்சி மற்றும் நீதிபதி விபுல் பஞ்சோலி ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது.

    அப்போது தமிழ்நாடு அரசு சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கோபால் சுப்பிரமணியத்திடம் கேள்விகளை அடுக்கிய நீதிபதி காந்த்,

    "இவை அனைத்தையும் அரசே ஏற்றுக்கொள்வது பொதுநலனுக்கு உகந்ததா? இலவசங்களால் ஒட்டுமொத்த நாடும் ஏற்கனவே... நாங்கள் குறிப்பாக தமிழ்நாட்டைப் பற்றி மட்டும் பேசவில்லை. ஒட்டுமொத்த இந்தியா குறித்தும் பேசுகிறோம். நாம் என்ன மாதிரியான கலாச்சாரத்தை வளர்த்து வருகிறோம்? மின்சாரக் கட்டணம் செலுத்தக்கூடிய நிலையில் இருப்பவர்களுக்கும், விளிம்புநிலை மக்களுக்கும் இடையே என்ன வேறுபாடு உள்ளது?

    ஒரு நல்ல அரசு என்ற முறையில், விளிம்புநிலை மக்களுக்கு நீங்கள் நிவாரணம் வழங்க விரும்புவது புரிந்துகொள்ளத்தக்கது. ஆனால், வசதியுள்ளவர்கள் மற்றும் வசதியற்றவர்களுக்கு இடையே எந்தப் பாகுபாடும் காட்டாமல் நீங்கள் (இலவசங்களை) வழங்கத் தொடங்கினால், அது ஒரு வகையான 'திருப்திப்படுத்தும் அரசியல்' ஆகாதா?"

    நீங்கள் வருவாய் உபரி மாநிலமாக இருந்தாலும் கூட, அந்தத் தொகையை சாலைகள், மருத்துவமனைகள் மற்றும் பள்ளிகளை மேம்படுத்துவது போன்ற ஒட்டுமொத்த பொதுமக்களின் வளர்ச்சிக்காகச் செலவிடுவது உங்கள் கடமை அல்லவா? அதற்குப் பதிலாக, நீங்கள் தொடர்ந்து உணவு மற்றும் ஆடைகளை விநியோகித்துக் கொண்டே இருக்கிறீர்கள், மக்களும் தேர்தல் நேரத்தில் அனைத்தையும் அனுபவிக்கிறார்கள். இந்த நாட்டில் என்ன நடந்து கொண்டிருக்கிறது?

    இல்லாதவர்களுக்கு வழங்க வேண்டியது அவசியமானது என்பது புரிந்துகொள்ளத்தக்கது. கல்வி கற்க வசதியற்ற குழந்தைகள் இருந்தால், அரசு அதை வழங்க வேண்டும். அது அரசின் கடமை. திறமையான ஆனால் மருத்துவக் கல்லூரிகளுக்குச் செல்ல வசதியற்ற குழந்தைகள் இருந்தால், அரசு அவர்களுக்கு உதவ வேண்டும். ஆனால், வசதிகளை அனுபவிக்கக்கூடிய நிலையில் இருக்கும், அனைத்து வாழ்வாதாரங்களும் கொண்ட வசதி படைத்தவர்களுக்கே எந்த வகையான இலவசமும் முதலில் போய்ச் சேருகிறது. மாநில அரசுகள் தங்களது இதுபோன்ற கொள்கைகளை மறுபரிசீலனை செய்ய வேண்டிய தருணம் இது? என்று நினைக்கிறோம். 

    சமீபத்தில் தேர்தல்கள் நடைபெற்ற மாநிலங்களை நாம் பார்த்தோம். ஏன் தேர்தல் நெருங்கும் வேலையில் திட்டங்கள் அறிவிக்கப்படுகின்றன? அனைத்து அரசியல் ஆளுமைகள், தலைவர்கள், கட்சிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் என அனைவரும் இதுகுறித்து சிந்திக்க வேண்டும். இப்படி இலவசங்களை தொடர்ந்து கொடுத்துவந்தால் அது நாட்டின் வளர்ச்சியைத் தடுத்துவிடும். ஒரு சமநிலை இருக்க வேண்டும். இந்த இலவசங்கள் எவ்வளவு நாள் நீடிக்கும்?

    மாநிலங்கள் நிதிப்பற்றாக்குறையில் இயங்கிக் கொண்டிருக்கும் நிலையிலும், மக்களுக்கு இத்தகைய பண விநியோகங்களைச் செய்து வருவதுதான் எங்களது கவலை. அந்தப் பணம் எங்கிருந்து வருகிறது? ஏன் அந்தப் பணத்தை வளர்ச்சிப் பணிகளுக்காக அர்ப்பணிக்கக்கூடாது? சாலைகள், நீர்ப்பாசனம், மின்சாரம் என நீங்கள் எதை விரும்புகிறீர்களோ, அதற்கான நீண்டகால வளர்ச்சி திட்டத்தை உருவாக்கலாம். 

    மக்கள் சுயமாக சம்பாதித்து, கண்ணியத்துடனும், சுயமரியாதையுடனும் வாழ்வதற்குத் தேவையான வேலைவாய்ப்பு வழிகளை அரசு உருவாக்க வேண்டும்.  இலவச உணவு, இலவச எரிவாயு, இலவச மின்சாரம் என அனைத்தையும் கொடுக்கத் தொடங்கி... நேரடியாக அவர்களின் வங்கிக் கணக்கிலேயே பணத்தையும் செலுத்தினால், பிறகு மக்கள் ஏன் வேலை செய்யப் போகிறார்கள்? தங்களுக்குத் தேவையான அனைத்தும் ஒரே இடத்தில் கிடைத்துவிடும் என்று தெரிந்த பிறகு, அவர்கள் எங்கிருந்து வேலையைக் கற்றுக்கொள்வார்கள்? நாம் இப்படித்தான் தேசத்தைக் கட்டமைக்கிறோமா?" என கேள்வி எழுப்பினார். 

    தொடர்ந்து தமிழ்நாடு அரசின் மனுவை ஏற்றுக்கொண்ட உச்ச நீதிமன்றம், இதுதொடர்பாக மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது. 

    • அரியானா நகர்ப்புற மேம்பாட்டு ஆணையத்தின் இந்த நடவடிக்கையை எதிர்த்து பஞ்சாப்-அரியானா ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.
    • இதை விசாரித்த ஐகோர்ட், வீடு ஒதுக்கீட்டு நடவடிக்கையில் தலையிட முடியாது என மறுத்து விட்டது.

    புதுடெல்லி:

    அரியானா மாநில வீட்டுவசதி துறை சார்பில் கட்டப்பட்ட உயர் ரக வீடுகளில், அதன் நிர்வாகக்குழு உறுப்பினர் மற்றும் அவரது துணை அதிகாரிக்கு என 2 வீடுகள் ஒதுக்கப்பட்டது.

    அரியானா நகர்ப்புற மேம்பாட்டு ஆணையத்தின் இந்த நடவடிக்கையை எதிர்த்து பஞ்சாப்-அரியானா ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இதை விசாரித்த ஐகோர்ட்டு. வீடு ஒதுக்கீட்டு நடவடிக்கையில் தலையிட முடியாது என மறுத்து விட்டது.

    இதைத்தொடர்ந்து நகர்ப்புற மேம்பாட்டு ஆணையத்தின் உறுப்பினரான தினேஷ் குமார் என்பவர் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தார். இதை விசாரிக்க நீதிபதிகள் சஞ்சய் குமார், வினோத் சந்திரன் அமர்வு, பஞ்சாப்-அரியானா ஐகோர்ட்டு உத்தரவை ரத்து செய்தது.

    அத்துடன் 2 வீடுகளின் ஒதுக்கீட்டு உத்தரவை ரத்து செய்த நீதிபதிகள், இந்த விவகாரத்தில் நகர்ப்புற மேம்பாட்டு ஆணையத்துக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதித்தனர்.

    அத்துடன் வீடு வாங்கியவர்களுக்கும் அபராதம் விதித்ததுடன், வீட்டில் இருந்து ஒரு மாதத்துக்குள் வெளியேறவும் உத்தரவிட்டனர்.

    முன்னதாக, நகர்ப்புற மேம்பாட்டு ஆணையம், நிர்வாகக்குழு உறுப்பினர் மற்றும் அவரது துணை அதிகாரிக்கு வழங்கப்பட்ட ஒதுக்கீடுகள் தன்னிச்சையானவை, பாரபட்சமானவை மற்றும் அமைப்பின் தகுதி அளவுகோல்களை மீறுவதாகும் என நீதிபதிகள் தெரிவித்தனர்.

    அதிகாரத்தில் இருப்பவர்கள் தங்கள் உறவினர்களுக்கு சலுகை வழங்குதல் மற்றும் சுயநலம் பாராட்டுதல் ஆகியவை ஒரு ஜனநாயக அமைப்புக்கு விரோதமானவை எனக்கூறிய நீதிபதிகள். அரசு சேவை உறுப்பினர்களைக் கொண்ட ஒரு சமூகத்துக்குள் வெளிப்படையான ஒதுக்கீட்டின் மூலம் அதன் உறுப்பினர்களுக்கு வீட்டு வசதிகளை வழங்க வேண்டும் என்றும் தெரிவித்தனர்.

    வீடுகளை ஒதுக்குவதில் நிர்வாகக்குழு உறுப்பினர்களுக்கு எந்தவித முன்னுரிமையும் காட்டக்கூடாது என்றும், ஆனால் இந்த விவகாரத்தில் பாரபட்சம் மற்றும் சுயநலமே மேலோங்கி இருப்பதாகவும் தெரிவித்தனர்.

    • ராணுவ ஓய்வூதிய விதிகள் 1961 அடிப்படையில், புகைபிடித்தல் காரணமாக ஏற்படும் பக்கவாதம் "பணி நிமித்தமான பாதிப்பு என்று கருதப்படாது.
    • தேவையற்றப் பழக்கங்களால் ஏற்படும் நோய்களுக்கு ஊனமுற்ற ஓய்வூதியம் வழங்க முடியாது

    புகைபிடித்தல் காரணமாக ஏற்படும் பக்கவாதத்திற்கு ஊனமுற்ற ஓய்வூதியம் வழங்கப்படமாட்டாது என்று இந்திய உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மது அருந்துதல், புகையிலை அல்லது போதைப்பொருள் பயன்பாடு போன்ற தனிப்பட்ட, தேவையற்றப் பழக்கங்களால் ஏற்படும் நோய்களுக்கு ஊனமுற்ற ஓய்வூதியம் வழங்க முடியாது என்று நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது.

    முன்னாள் ராணுவ வீரர் ஒருவர் தொடர்ந்த வழக்கில் நீதிபதி அரவிந்த் குமார் மற்றும் நீதிபதி பி.பி. வரலே ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த தீர்ப்பை வழங்கியுள்ளது. அவருக்கு ஏற்பட்ட 'Stroke Ischemic RT MCA TERRITORY' (மூளையின் வலது பக்க தமனியில் ஏற்பட்ட இரத்த அடைப்பால் வந்த பக்கவாதம்) பாதிப்பு, ராணுவப் பணியால் ஏற்பட்டதோ அல்லது பணிச் சூழலால் தீவிரமடைந்ததோ அல்ல என்று மருத்துவக் குழு அறிக்கை சமர்பித்த நிலையில் மனுவை தள்ளுபடி செய்து, ஊனமுற்றோர் ஓய்வூதிய கோரிக்கையை நிராகரித்த ஆயுதப்படை தீர்ப்பாயத்தின் உத்தரவை உறுதிசெய்தது.

    அவரது பக்கவாதத்திற்கு புகைபிடித்தலே காரணம் என்று மருத்துவக் குழு உறுதி செய்தது. அவர் ஒரு நாளைக்கு சுமார் 10 பீடிகள் புகைக்கும் பழக்கம் கொண்டவர் எனவும் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. ஒரு ரத்த உறைவு அல்லது கொழுப்புப் படிவம் மூளைக்குச் செல்லும் தமனியை அடைக்கும்போது, ஆக்சிஜன் விநியோகத்தைத் தடுத்து இரத்த ஓட்டத்தைக் குறைப்பதன் மூலம் 'இஸ்கிமிக் ஸ்ட்ரோக்' ஏற்படுகிறது என்றும், இதன் காரணமாக மூளைத் திசுக்கள் பாதிப்படைகின்றன என்றும் தெரிவிக்கப்பட்டது.

    மேலும், இதற்கான முக்கிய காரணிகளாக உயர் இரத்த அழுத்தம், புகைபிடித்தல், சர்க்கரை நோய், அதிக கொலஸ்ட்ரால், உடல் பருமன் மற்றும் இதயத் துடிப்பு ஒழுங்கற்ற நிலை ஆகியவை இருப்பதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

    இதனைத்தொடர்ந்து "முதல் மருத்துவ அறிக்கை மற்றும் மருத்துவக் குழுவின் கருத்துகளை நாங்கள் ஆய்வு செய்ததில், அவருக்கு ஏற்பட்ட 'Stroke Ischemic RT MCA TERRITORY' எனும் பாதிப்பானது இராணுவப் பணியால் ஏற்பட்டதோ அல்லது பணியின் காரணமாகத் தீவிரமடைந்ததோ அல்ல என்பதில் எங்களுக்கு எவ்விதச் சந்தேகமும் இல்லை.

    மேல்முறையீடு செய்தவர் ஒரு நாளைக்கு பத்து பீடிகள் என்ற கணக்கில் புகைபிடிக்கும் பழக்கம் கொண்டவர் என்பது இரண்டு அறிக்கைகளிலும் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளதே இதற்கு காரணமாகும்," என்று நீதிமன்றம் கூறியது.

    இராணுவ ஓய்வூதிய விதிகள் 1961 மற்றும் மருத்துவ அதிகாரிகளுக்கான வழிகாட்டுதல் 2002 ஆகியவற்றின் அடிப்படையில், புகைபிடித்தல் காரணமாக ஏற்படும் பக்கவாதம் "பணி நிமித்தமான பாதிப்பு" (Attributable to service) என்று கருதப்படாது. 

    • குற்றம்சாட்டப்பட்டவருக்கு தண்டனை குறையும் சூழல் ஏற்பட்டது.
    • பாதிக்கப்பட்டவர் மீதான இரக்கமும், மனிதாபிமானமும் இருக்க வேண்டும்.

    அலகாபாத் உயர் நீதிமன்றம், சிறுமிக்கு பாலியல் தொந்தறவு அளித்த நபர் மீதான போக்சோ வழக்கு ஒன்றில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் வழங்கிய தீர்ப்பில், தகாத முறையில் தொடுவதும், பைஜாமாவை கீழிறக்குவதும் பாலியல் வன்கொடுமைக்கான ஆயத்தம் மட்டுமே என்றும், அது வன்புணர்வு முயற்சி அல்ல என்றும் கூறியிருந்தது.

    இதனால் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவருக்கு தண்டனை குறையும் சூழல் ஏற்பட்டது. இந்த தீர்ப்பு விமர்சனங்களை ஏற்படுத்தியது

    இதை கண்டித்து மூத்த வழக்கறிஞர் ஷோபா குப்தா எழுதிய கடிதத்தை ஏற்று, உச்ச நீதிமன்றம் இந்த வழக்கை தாமாகவே முன்வந்து விசாரணைக்கு எடுத்தது.

    தலைமை நீதிபதி சூர்ய காந்த், நீதிபதிகள் ஜாய்மால்யா பாக்சி மற்றும் என்.வி. அஞ்சாரியா ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த வழக்கை நேற்று விசாரித்தது.

    தலைமை நீதிபதி சூர்ய காந்த், "நீதிபதிகளின் தீர்ப்புகள் சட்டக் கொள்கைகளை மட்டும் கொண்டிருக்கக் கூடாது; பாதிக்கப்பட்டவர் மீதான இரக்கமும், மனிதாபிமானமும் அதில் இருக்க வேண்டும்" என்று குறிப்பிட்டார்.

    உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை ரத்து செய்த உச்சநீதிமன்ற அமர்வு, போக்சோ சட்டத்தின் கீழ் குற்றவாளிகள் மீது மீண்டும் பாலியல் வன்கொடுமை முயற்சி என்ற கடுமையான பிரிவின் கீழ் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டது.

    மேலும், பாலியல் குற்ற வழக்குகளைக் கையாளும் போது நீதிபதிகள் உணர்வுப்பூர்வமாகச் செயல்பட வேண்டியது அவசியம் என்றும் இதற்காகப் புதிய வழிகாட்டுதல்களை உருவாக்க ஒரு நிபுணர் குழுவை அமைக்குமாறும் தேசிய நீதித்துறை அகாடமியின் இயக்குநருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  

    • நீதிமன்றத்திற்கு வரும்போது நடுநிலையான மனுவுடன் வாருங்கள்.
    • நீதிமன்ற உத்தரவால் ஒருவரின் எண்ணங்களை மாற்றிவிட முடியுமா?

    நாட்டில் அதிகரித்து வரும் வெறுப்பு பேச்சுக்கு எதிராக 12 பேர் இணைந்து தாக்கல் செய்த பொதுநல மனுவை தலைமை நீதிபதி சூர்யகாந்த், நீதிபதி நாகரத்னா ஆகியோர் அடங்கிய உச்சநீதிமன்ற அமர்வு நேற்று விசாரித்தது.

    மூத்த வழக்கறிஞர் கபில் சிபல், மனுதாரர்கள் சார்பில் ஆஜராகி, "நாட்டில் நிலவும் சூழல் மிகவும் நச்சுத்தன்மையுடன்மாறியுள்ளது. உச்ச நீதிமன்றத்தால் மட்டுமே இதனை சரிசெய்ய முடியும்" என்று வாதிட்டார்.

    இந்த மனுவில் பாஜகவைச் சேர்ந்த யோகி ஆதித்யநாத்(உ.பி), ஹிமந்த விஸ்வ சர்மா(அசாம்), தேவேந்திர பட்னாவிஸ்(மகாராஷ்டிரா), புஷ்கர் சிங் தாமி(உத்ராகண்ட்) உள்ளிட்ட சில முதல்வர்கள் மற்றும் தலைவர்களின் பெயர்கள் மட்டுமே குறிப்பிடப்பட்டிருந்தது.

    இதை சுட்டிக்காட்டிய தலைமை நீதிபதி சூர்யகாந்த், "வெறுப்புப் பேச்சுகளில் ஈடுபடும் மற்றவர்களை விட்டுவிட்டு, ஒரு குறிப்பிட்ட தரப்பை மட்டும் இலக்கு வைப்பது ஏன்?" என்று கேள்வி எழுப்புனார்.

    மேலும், நீதிமன்றத்திற்கு வரும்போது நடுநிலையான மனுவுடன் வாருங்கள். வெறுப்புப் பேச்சு என்பது அனைத்துத் தரப்பிலும் உள்ளது.

    வழிகாட்டுதல்கள் உருவாக்கப்பட வேண்டுமானால், அவை அனைத்து அரசியல் கட்சியினருக்கும் பொருந்தக் கூடியதாக இருக்க வேண்டும்" என்று தெரிவித்தார்.

    வெறுப்புப் பேச்சு என்பது ஒருவரின் எண்ணத்திலிருந்து உருவாகிறது. நீதிமன்ற உத்தரவால் ஒருவரின் எண்ணங்களை மாற்றிவிட முடியுமா?" என்று நீதிபதி நாகரத்னா கேள்வி எழுப்பினார்.

    நீதிமன்றத்தின் விமர்சனத்தைத் தொடர்ந்து, மனுவில் உள்ள தனிநபர்களின் பெயர்களை நீக்கிவிட்டு, திருத்தப்பட்ட புதிய மனுவைத் தாக்கல் செய்ய வழக்கறிஞர் கபில் சிபல் ஒப்புக்கொண்டார். இதற்கு நீதிமன்றம் இரண்டு வார கால அவகாசம் வழங்கியுள்ளது.  

    ×