என் மலர்
இந்தியா

நீதித்துறை ஊழல் பற்றி 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஏன் கற்பிக்க வேண்டும்? - NCERT சர்ச்சையால் பிரதமர் அதிருப்தி
- சிறுவயது மாணவர்களுக்கு இத்தகைய உணர்வுப்பூர்வமான விஷயங்களைக் கற்பிப்பது முறையானது அல்ல
- மத்திய அரசு இதுதொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் மன்னிப்பு கோரியது.
8ஆம் வகுப்பு (CBSE) சமூக அறிவியல் பாடப்புத்தகத்தில் "நீதித்துறையின் பங்கு" என்ற பாடத்தில், நீதித்துறையில் நிலவும் ஊழல் குறித்த ஒரு புதிய பகுதி சமீபத்தில் சேர்க்கப்பட்டது. இது குறித்து தற்போது பெரும் சர்ச்சை எழுந்துள்ளது. இந்த விவகாரத்தை உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி சூர்யகாந்த் தலைமையிலான அமர்வு தானாக முன்வந்து விசாரித்தது.
நீதித்துறையை இழிவுபடுத்தும் எத்தகைய செயலையும் அனுமதிக்க முடியாது என்று நீதிமன்றம் எச்சரித்ததைத் தொடர்ந்து, அந்தப் பாடப்பகுதியை நீக்க மத்திய கல்வி அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. தற்போது அந்தப் புத்தகங்கள் சந்தையிலிருந்து திரும்பப் பெறப்பட்டு வருகின்றன. மேலும் இன்று மத்திய அரசு இதுதொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் மன்னிப்பு கோரியது.
இந்நிலையில் செவ்வாய்க்கிழமையன்று நடந்த அமைச்சரவை கூட்டத்தில் இதுதொடர்பாக பிரதமர் மோடி அதிருப்தி தெரிவித்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளது. "நீதித்துறை ஊழல் பற்றி 8 ஆம் வகுப்பு குழந்தைகளுக்கு நாம் என்ன கற்பிக்கிறோம்?" என கேள்வி எழுப்பியதாக கூறப்படுகிறது. இவ்வளவு சிறிய வயது மாணவர்களுக்கு இத்தகைய உணர்வுப்பூர்வமான விஷயங்களைக் கற்பிப்பது முறையானது அல்ல என்பதையும் அவர் சுட்டிக்காட்டியதாக கூறப்படுகிறது.
மேலும் இந்தத் தவறுக்குக் காரணமானவர்கள் யார் என்பதைக் கண்டறிந்து, அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று பிரதமர் வலியுறுத்தியதாகவும் கூறப்படுகிறது.






