செய்திகள்

12 மணி நேரத்திற்குள் அடுத்தடுத்து 4 ரெயில் விபத்துகள்: பயணிகள் அதிர்ச்சி

Published On 2017-11-24 11:56 GMT   |   Update On 2017-11-24 11:57 GMT
கடந்த 12 மணி நேரத்தில் அடுத்தடுத்து நடைபெற்ற 4 ரெயில்கள் விபத்துக்களில் 7 பேர் உயிரிழந்துள்ள நிலையில், ரெயில் பாதுகாப்பு குறித்தான அச்சம் பயணிகள் மத்தியில் எழுந்துள்ளது.
புதுடெல்லி:

குறைந்த கட்டணம், விரைவான போக்குவரத்து என சாமானிய மக்களின் முதல் தேர்வாக இருப்பது ரெயில் பயணம்தான். உலகின் மிகப்பெரிய போக்குவரத்து சங்கிலியில் ஒன்றாக இருக்கும் இந்தியன் ரெயில்வே ஒரு நாளைக்கு சராசரியாக 2.4 கோடி பயணிகளை கையாளுகிறது. இது கிட்டத்தட்ட ஆஸ்திரேலியா நாட்டு மக்கள் தொகைக்கு சமமான ஒன்றாகும்.

இந்நிலையில், கடந்த 12 மணி நேரத்தில் தொடர்ந்து 4 ரெயில்கள் விபத்தில் சிக்கியுள்ளன. இந்த விபத்துக்களில் சிக்கி 7 பேர் பலியானதுடன் 11 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். இந்த தொடர் விபத்துக்கள் பயணிகளிடையே ரெயில் பாதுகாப்பு குறித்தான கேள்வி எழுந்துள்ளது.

இதில் உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் 3 ரெயில் விபத்துக்களும், ஒடிசாவில் ஒரு விபத்தும் நடைபெற்றுள்ளன. உத்தரப்பிரதேசத்தில் வாஸ்கோ டா காமா - பாட்னா எக்ஸ்பிரஸ் தடம்புரண்ட விபத்தில் 3 பேர் பலியாகியுள்ளனர். இதே மாநிலத்தில் அமேதி மாவட்டத்தில் தண்டவாளத்தை கடந்த ஜீப் மீது பயணிகள் ரெயில் மோதியதில் 4 பேர் பலியானார்கள். 2 பேர் காயம் அடைந்தனர்.

சஹாரான்பூர் அருகில் ஜம்மு - பாட்னா அர்ச்சனா எக்ஸ்பிரசின் இன்ஜின் தனியாக கழன்று சென்றது. ரெயில்வே ஊழியர்கள் என்ஜினை மாட்டிய சிறிது நேரத்தில் மீண்டும் கழன்று ஓடியதால் பரபரப்பு ஏற்பட்டது. அதன்பின்னர் ஊழியர்கள் மீண்டும் என்ஜினை சரிசெய்த பின் எக்ஸ்பிரஸ் ரெயில் அங்கிருந்து கிளம்பியது.

ஒடிசா மாநிலத்தில் இன்று காலை கோரக்நாத் - ரகுநாத்பூர் இடையே சென்ற சரக்கு ரெயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. கடந்த 12 மணி நேரத்தில் தொடர்ந்து 4 ரெயில்கள் விபத்தில் சிக்கியுள்ளதால் பயணிகள் கடும் அதிர்ச்சிக்கு உள்ளாகினர்.
Tags:    

Similar News