செய்திகள்

கிருஷ்ணா நதியில் படகு கவிழ்ந்து 21 பேர் பலி - பிரதமர் மோடி இரங்கல்

Published On 2017-11-13 22:52 GMT   |   Update On 2017-11-13 22:53 GMT
ஆந்திராவில் சுற்றுலா சென்ற படகு கிருஷ்ணா நதியில் கவிழ்ந்து விழுந்த விபத்தில் பலி எண்ணிக்கை 21 ஆக உயர்ந்துள்ளது. இந்த விபத்திற்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்
அமராவதி:

ஆந்திராவின் விஜயவாடா அருகே உள்ள பெர்ரி கிராமப்பகுதி வழியாக கிருஷ்ணா நதி ஓடுகிறது. நேற்று முன்தினம் அங்கு சுற்றுலாவாக வந்த சிலர் நதியில் உல்லாச படகு சவாரியில் ஈடுபட்டனர். இதற்காக தனியார் படகு ஒன்றை வாடகைக்கு அமர்த்தி சுமார் 38 பேர் அதில் பயணம் மேற்கொண்டனர்.



கோதாவரியும், கிருஷ்ணா நதியும் சந்திக்கும் இடமான பவித்ரா சங்கமம் அருகே படகு சென்றபோது திடீரென நிலைதடுமாறி ஆற்றில் கவிழ்ந்ததுடன், அதில் இருந்தவர்களும் நீரில் மூழ்கி தத்தளித்தனர். இதைப்பார்த்த மீனவர்கள் சிலர், உடனே ஆற்றில் குதித்து 15 பேரை லேசான காயங்களுடன் மீட்டனர். மீதமுள்ளவர்களை தேடும் பணியில் தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்புக்குழுவினர், தீயணைப்பு துறையினர் ஈடுபட்டனர்.

அதற்குள் பலர் உயிரிழந்து விட்டனர். இதில் 16 பேரின் உடல் நேற்று முன்தினம் இரவு வரை மீட்கப்பட்டது. தொடர்ந்து நடந்த தேடுதல் வேட்டையின் பலனாக நேற்று காலையில் மேலும் 3 உடல்கள் மீட்கப்பட்டன. இதனால் பலி எண்ணிக்கை 19 ஆக அதிகரித்தது. இன்னும் 4 பேர் மாயமாகி இருப்பதாக கூறப்படுகிறது.

கேரளாவில் இருந்து நேற்று திரும்பிய முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு நேரடியாக படகு மூழ்கிய பகுதிக்கு சென்று மீட்பு பணிகளை துரிதப்படுத்தினார். மேலும் பலியானோரின் குடும்பத்துக்கு மாநில அரசு சார்பில் தலா ரூ.5 லட்சம் நிவாரணத்தொகையும் அறிவிக்கப்பட்டு உள்ளது.

படகு விபத்தில் பலியானவர்களின் குடும்பத்துக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்து உள்ளார். இந்த சம்பவம் தனக்கு கவலை அளித்ததாகவும், தனது எண்ணமெல்லாம், பலியானோரின் குடும்பத்தினருடனே இருப்பதாகவும் தனது டுவிட்டர் தளத்தில் அவர் கூறியுள்ளார். 
Tags:    

Similar News