செய்திகள்

வங்கி கணக்குடன் ஆதார் இணைப்பு கட்டாயம் இல்லை: ரிசர்வ் வங்கி அறிவிப்பு

Published On 2017-10-21 06:10 GMT   |   Update On 2017-10-21 06:10 GMT
வங்கி கணக்குடன் ஆதார் எண் இணைப்பு கட்டாயம் இல்லை என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

புதுடெல்லி:

மத்திய அரசு நலத் திட்டங்கள் மற்றும் உதவித் தொகைகள் பெறுவதற்கு ஆதார் எண்ணை கட்டாயம் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு உள்ளது.

பான் கார்டு, செல்போன் எண் ஆகியவற்றுடன் ஆதார் எண்ணை இணைக்க அறிவுறுத்தப்பட்டு இருக்கிறது. இதற்காக காலக்கெடுவும் அளிக்கப்பட்டு இருக்கிறது.


இதே போல் வங்கி கணக்குடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்றும் டிசம்பர் 31-ந்தேதி கடைசி நாள். அதன்பிறகு ஆதார் எண்ணை இணைக்காத வங்கி கணக்குகள் முடக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. இதனால் வாடிக்கையாளர்கள் தங்கள் வங்கி கணக்குடன் ஆதார் எண்ணை இணைத்து வருகிறார்கள்.

இந்த நிலையில் ஆதார் எண் இணைப்பது தொடர்பாக புதுடெல்லியில் உள்ள ஒரு செய்தி இணையதளம், தகவல் உரிமை சட்டத்தின் கீழ் ரிசர்வ் வங்கியிடம் தகவல் கேட்டது. அதற்கு ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ள விளக்கம் வருமாறு:-


வாடிக்கையாளர்கள் தங்கள் வங்கி கணக்குடன் ஆதார் எண்ணை கட்டாயம் இணைக்க வேண்டும் என்று ரிசர்வ் வங்கி உத்தரவு பிறப்பிக்கவில்லை. சட்ட விரோத பண பரிமாற்றத்தை தடுப்பதற்காக கடந்த ஜூன் 1-ந்தேதி மத்திய அரசு வெளியிட்ட அறிக்கையில், வங்கிகளில் கணக்கு வைத்துள்ளவர்கள், புதிய கணக்கு தொடங்குபவர்கள் தங்களின் ஆதார் எண்ணையும், பான் கார்டு எண்ணையும் வங்கியில் சமர்ப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது. இது தொடர்பாக ரிசர்வ் வங்கி எந்த உத்தரவையும் பிறப்பிக்க வில்லை என்றும் கூறப்பட்டு இருந்தது.

Tags:    

Similar News