செய்திகள்

இந்தியா - சீனா எல்லைப்பகுதியை வான்வழியாக பார்வையிட்ட நிர்மலா சீதாராமன்

Published On 2017-10-07 11:46 GMT   |   Update On 2017-10-07 11:46 GMT
சிக்கிம் மாநிலத்தில் உள்ள இந்தியா - சீனா எல்லைப்பகுதியை ராணுவ மந்திரி நிர்மலா சீதாராமன் இன்று வான்வழியாக சென்று பார்வையிட்டார்.
கங்டாக்:

சிக்கிம் மாநிலத்தில் உள்ள இந்தியா - சீனா எல்லைப்பகுதியை ராணுவ மந்திரி நிர்மலா சீதாராமன் இன்று வான்வழியாக சென்று பார்வையிட்டார்.

புதிய ராணுவ மந்திரியாக பொறுப்பேற்றுள்ள நிர்மலா சீதாராமன் நாட்டின் எல்லைப்பகுதிகளில் உள்ள பாதுகாப்பு நிலவரங்கள் தொடர்பாக ஆய்வு செய்து வருகிறார். சமீபத்தில் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் சுற்றுப்பயணம் செய்த அவர், தற்போது அருணாசலப்பிரதேசம் மற்றும் சிக்கிம் மாநிலங்களில் உள்ள எல்லைப்பகுதிகளை பார்வையிட்டு வருகிறார்.

அவ்வகையில், இன்று பிற்பகல் சிக்கிம் மாநிலத்தில் சர்ச்சைக்குரிய இந்தியா - சீனா எல்லையோரப் பகுதியான டோக்லாம் - நாதுலா பகுதியை விமானப்படை ஹெலிகாப்டர் மூலம் சென்று பார்வையிட்டார். சிக்கிம் மாநில கவர்னர் ஸ்ரீனிவாஸ் பட்டில், முதல் மந்திரி பவன் சாம்லிங் ஆகியோரை இன்று மாலை சந்திக்கும் ராணுவ மந்திரி, அங்குள்ள பாதுகாப்பு நிலவரம் குறித்து ஆலோசனை நடத்துவார் என ராணுவ உயரதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Tags:    

Similar News