செய்திகள்

ரூபாய் நோட்டு ஒழிப்பில் முறைகேடு: 150 வங்கி அதிகாரிகள் மீது வழக்கு

Published On 2017-08-16 07:36 GMT   |   Update On 2017-08-16 07:36 GMT
மத்திய அரசு மேற்கொண்ட பழைய ரூ.500, ரூ.1000 நோட்டுகள் ஒழிப்பு நடவடிக்கையின் போது முறைகேடுகளில் ஈடுபட்டதாக 150 வங்கி அதிகாரிகள் மீது சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

புதுடெல்லி:

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் மத்திய அரசு ரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல்லாது என்று அறிவித்து அவற்றை வங்கிகள் மூலம் வாபஸ் பெற்றது.

இதில் அரசு மற்றும் தனியார் வங்கிகளில் பெருமளவில் முறைகேடுகள் நடந்தது. இது பற்றி சி.பி.ஐ. விசாரணை நடத்தியது. பல்வேறு இடங்களில் சி.பி.ஐ. சோதனை நடத்தி ரூ.36 கோடி பணத்தை பறிமுதல் செய்தது.

இது தொடர்பாக சி.பி.ஐ. விசாரணை நடத்தி கடந்த 9 மாதத்தில் 150 வங்கி அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு செய்துள்ளது. இவர்கள் அரசு மற்றும் தனியார் வங்கிகள், தபால் நிலையங்கள், ரெயில்வே, இன்சூரன்ஸ் மற்றும் இதர அரசு துறைகளில் பணயாற்றுபவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ரிசர்வ் வங்கி அதிகாரிகள் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.

இது தவிர வரி ஆலோசகர்கள், ஆடிட்டர்கள், புரோக்கர்கள், நகைக் கடைக்காரர்கள், வர்த்தகர்கள் என 300 பேர் முறைகேடுகளில் ஈடுபட்ட தாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.


இதில் 12-க்கும் மேற்பட்ட வழக்குகளில் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டு உள்ளது. 55 வழக்குகள் மீது தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. வங்கிகள் தொடர்பாக 53 வழக்குகள் மீதும், தபால் நிலையங்கள் சம்பந்தப்பட்ட 10 வழக்குகள் மீதும் விசாரணை நடந்து வருகிறது.

ஒரு வங்கியின் துணை பொது மேலாளர் மீது இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் வழக்கு பதிவு செய்யப்பட்டது. மும்பையில் வங்கி கிளை மேலாளர் ஒருவரும் சிக்கியுள்ளார்.

இவர்கள் இருவரும் நகை வியாபாரிகளுக்கு பண முறைகேடுக்கு உதவி இருக்கிறார்கள் என்று சி.பி.ஐ. தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News