செய்திகள்

மந்திரிகளை சுதந்திர தினத்துக்கு கொடியேற்ற விடமாட்டோம்: மராட்டிய மாநில விவசாயிகள் ஆவேசம்

Published On 2017-08-12 15:38 GMT   |   Update On 2017-08-12 15:39 GMT
மந்திரிகளை சுதந்திர தினத்துக்கு கொடியேற்ற விடமாட்டோம் என மராட்டிய மாநில விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
மும்பை:

மராட்டிய மாநிலம் மராத்வாடா மாவட்டத்தில் பருவநிலை மாறுபாடு, வேளாண் உற்பத்தி பொருட்களின் விலை அதிகரிப்பு, போதிய விளைச்சல் இல்லாதது உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் விவசாயிகள் தற்கொலை செய்து கொள்வது தொடர்கதையாகி வருகிறது.

மாநிலம் முழுவதும் ஆயிரத்துக்கு மேற்பட்ட விவசாயிகள் கடன் சுமை தாங்க முடியாமல் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இதுபோன்ற தற்கொலைகளை தடுக்கவும் விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்யவும் மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அங்குள்ள விவசாய சங்கங்களை சேர்ந்தவர்கள் நீண்ட நாட்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.

அதைதொடர்ந்து, விவசாயிகளின் பயிர்க் கடன் தொகையில் 34 ஆயிரம் கோடி ரூபாய்க்கான கடன் தள்ளுபடி செய்யப்படும். இந்த திட்டத்தின்கீழ் ஒவ்வொரு விவசாயிக்கும் ஒன்றரை லட்சம் ரூபாய் வரை பயிர்க் கடன்கள்
தள்ளுபடியாகும் என்று முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் அறிவித்தார்.

ஆனால், அரசு அறிவித்த பயிர்க் கடன் தள்ளுபடி திட்டத்தை ஏற்கமுடியாது என விவசாய சங்கத்தினர் தெரிவித்தனர். விவசாயிகள் வாங்கிய பயிர்க் கடனை முற்றிலும் நீக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து வந்தனர்.

இந்நிலையில், மராட்டிய மாநில விவசாயிகள், வரும் சுதந்திர தினத்தன்று மந்திரிகளை கொடியேற்ற அனுமதிக்க மாட்டோம் என தெரிவித்துள்ளனர்.

இதுதொடர்பாக விவசாயிகள் சங்கத்தினர் கூறுகையில், “விவசாயிகள் வங்கிகளில் வாங்கிய கடனை மாநில அரசு முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும். அப்படி செய்தால்தான் மந்திரிகளை சுதந்திர தினத்துக்கு கொடியேற்ற அனுமதிப்போம். மேலும், ஆகஸ்ட் 14ஆம் தேதி மாநிலம் தழுவிய முழு அடைப்பு போராட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளோம்” என தெரிவித்துள்ளனர்.
Tags:    

Similar News