செய்திகள்

விவிஐபி ஹெலிகாப்டர் ஒப்பந்த ஊழல்: துபாய் நிறுவன இயக்குனரின் ஜாமீன் மனு தள்ளுபடி

Published On 2017-07-29 11:16 GMT   |   Update On 2017-07-29 11:16 GMT
விவிஐபி ஹெலிகாப்டர் ஒப்பந்த ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள துபாய் நிறுவன இயக்குனரின் ஜாமீன் மனுவை டெல்லி நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
புதுடெல்லி:

ஜனாதிபதி, துணை ஜனாதிபதி, பிரதமர் போன்ற மிக முக்கிய பிரமுகர்கள் பயணம் செய்வதற்கு இங்கிலாந்தில் உள்ள அகஸ்டா வெஸ்ட்லேண்ட் நிறுவனத்திடம் இருந்து 12 சொகுசு ஹெலிகாப்டர்கள் வாங்க 2010-ம் ஆண்டு ஒப்பந்தம் செய்யப்பட்டது. ரூ.3600 கோடி மதிப்பிலான இந்த ஒப்பந்தத்தில் முறைகேடு நடந்திருப்பதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

இது குறித்து விசாரணை நடத்தி வரும் அமலாக்கத்துறை, கடந்த 17-ம் தேதி துபாயைச் சேர்ந்த யு.எச்.ஒய். மற்றும் மேட்ரிக்ஸ் ஹோல்டிங்ஸ் நிறுவனங்களின் பெண் இயக்குனர் ஷிவானி சக்சேனாவை கைது செய்தது. சென்னையில் கைது செய்யப்பட்ட அவரை டெல்லியில் உள்ள பிஎம்எல்ஏ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி காவலில் எடுத்து விசாரணை நடத்தினர். இதற்காக அவரது விசாரணைக் காவல் அடுத்தடுத்து நீட்டிக்கப்பட்டது.

இந்நிலையில், ஷிவானி ஜாமீன் கேட்டு கோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனு மீதான விசாரணை இன்று நடைபெற்றது. இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி, ஷிவானியின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
Tags:    

Similar News