search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விவிஐபி ஹெலிகாப்டர் ஒப்பந்த ஊழல்"

    • ஹெலிகாப்டர்களை வாங்குவதற்கு ரூ.3 ஆயிரத்து 600 கோடிக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டது.
    • அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.

    காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி காலத்தில் கடந்த 2010-ம் ஆண்டு இத்தாலி நாட்டின் அகஸ்டா வெஸ்ட்லேண்ட் நிறுவனத்திடம் இருந்து முக்கிய பிரமுகர்களின் பயன்பாட்டுக்காக 12 அதிநவீன ஹெலிகாப்டர்களை வாங்குவதற்கு ரூ.3 ஆயிரத்து 600 கோடிக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டது.

    இதில், இடைத்தரகர்கள் மூலம் ரூ.360 கோடி லஞ்ச பணம் இந்தியர்களுக்கு கைமாறியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.

    இதற்கான பேரத்தில் இடைத்தரகராக செயல்பட்டதாக குற்றம்சாட்டப்படும் பிரிட்டன் நாட்டை சேர்ந்த தொழிலதிபர் கிறிஸ்டியன் ஜேம்ஸ் மைக்கேல், துபாயில் இருந்து நாடு கடத்தப்பட்டு, இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டார். பிறகு டெல்லியில் உள்ள சிபிஐ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த வழக்கில் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில், சிறையில் உள்ள கிறிஸ்டியன் மைக்கேல் தன்னை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். இது தொடர்பான மனுவில் தான் கைது செய்யப்பட்ட வழக்கில் அதிகபட்ச தண்டனை ஐந்து ஆண்டுகள் தான். அந்த வகையில், இந்த வழக்கில் தான் இதுவரை ஐந்து ஆண்டுகள் மூன்று மாதங்களாக சிறையில் அடைக்கப்பட்டு இருப்பதாக தெரிவித்துள்ளார்.

    தன் மீது சுமத்தப்பட்டு இருக்கும் வழக்கில் தண்டனை உறுதிப்படுத்தப்பட்டால் ஐந்து ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும் என்ற நிலையில், வழக்கின் விசாரணை முழுமையாக நிறைவடையும் முன்பே ஐந்து ஆண்டுகள் சிறையில் இருந்துவிட்டதாக குறிப்பிட்டுள்ளார். இந்த வழக்கின் விசாரணை நாளை உச்சநீதிமன்றத்தில் நடைபெற இருக்கிறது.

    ×