செய்திகள்

இரட்டை இலை பெற லஞ்சம் கொடுத்த வழக்கு: தினகரன் ஜாமீன் மனு 26-ந்தேதிக்கு ஒத்திவைப்பு

Published On 2017-05-22 07:36 GMT   |   Update On 2017-05-22 07:37 GMT
இரட்டை இலை பெற லஞ்சம் கொடுத்தது தொடர்பான வழக்கில் தினகரன் சார்பாக தாக்கல் செய்யப்பட்ட ஜாமீன் மனு 26-ந்தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
புதுடெல்லி:

அ.தி.மு.க. பிளவுபட்டதால் இரட்டை இலை சின்னத்தை தேர்தல் கமி‌ஷன் முடக்கி வைத்துள்ளது.

இந்த சின்னத்தை திரும்ப பெற சசிகலா அணியினரும், ஓ.பி.எஸ். அணியினரும் போட்டி போட்டு ஆவணங்களை சமர்பித்து வருகிறார்கள்.

இந்த நிலையில் டெல்லியில் கைதான இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகர் மூலம் இரட்டை இலை சின்னம் பெற ரூ.50 கோடி பேரம் பேசப்பட்ட தகவல் வெளியானது.

அ.தி.மு.க. அம்மா அணி துணைப் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் ரூ.50 கோடி பேரத்தை பேசியதாக டெல்லி போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். அதன் அடிப்படையில் கடந்த மாதம் 25-ந்தேதி டி.டி.வி.தினகரன் கைது செய்யப்பட்டார்.

டெல்லி கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட தினகரனை டெல்லி போலீசார் 7 நாட்கள் காவலில் எடுத்து விசாரித்தனர். பிறகு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட தினகரனை 15-ந்தேதி வரை சிறையில் அடைக்க உத்தரவிடப்பட்டது. இதையடுத்து அவர் டெல்லி திகார் ஜெயிலில் அடைக்கப்பட்டார்.



இந்த நிலையில் அவரது காவல் 29-ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டது. இதையடுத்து டி.டி.வி.தினகரன் தன்னை ஜாமீனில் விடுதலை செய்யக்கோரி கோர்ட்டில் மனு செய்தார்.

அந்த மனு மீதான விசாரணை இன்று (திங்கட் கிழமை) நடந்தது. அப்போது தினகரன் சார்பில் ஆஜரான வக்கீல் விசாரணையை சற்று ஒத்திவைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.

அதை ஏற்றுக்கொண்ட நீதிபதி விசாரணையை வருகிற 26-ந்தேதிக்கு ஒத்தி வைப்பதாக கூறினார். இந்த நிலையில் இடைத்தரகர் சுகேசும் தன்னை ஜாமீனில் விடுவிக்க கோரி மனு செய்திருந்தார்.

அந்த மனு மீதான விசாரணை இன்று பிற்பகல் நடைபெற உள்ளது. அப்போது சுகேசுக்கு ஜாமீன் கிடைக்குமா? என்பது தெரிய வரும். அதைப் பொறுத்தே டி.டி.வி.தினகரன் திகார் ஜெயிலில் இருந்து வெளிவர முடியுமா? என்பது உறுதியாகும்.
Tags:    

Similar News