மகனுக்கு திருமணமாகாத மனவேதனையில் தாய் தற்கொலை
- விக்னேஷ் (வயது30). திருமணம் ஆகாத நிலையில் மதுப்பழக்கத்திற்கு அடிமையாகி உள்ளார்.
- இந்த நிலையில் செல்வராணி நேற்று வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
திருச்சி,
திருச்சி மேல தேவதானம் பகுதியை சேர்ந்தவர் விக்னேஷ் (வயது30). இவருக்கு திருமணம் ஆகாத நிலையில் மதுப்பழக்கத்திற்கு அடிமையாகி உள்ளார். இதனைப் பார்த்த அவரது தாய் செல்வராணி (50) மன அழுத்தத்திற்கு ஆளானார். மகனுக்கு பல்வேறு இடங்களில் பெண் பார்த்த பின்னரும் திருமணம் அமையவில்லை.
இந்த நிலையில் செல்வராணி நேற்று வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து விக்னேஷ் கோட்டை காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருச்சி உறையூர் காவிரி நகர் பகுதியை சேர்ந்தவர் ரமேஷ் (வயது 35). இவர் போதும் பொண்ணு (34) என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். அதில் 2வது மகன் சாய்சாரா சற்று மனநலம் பாதிக்க பட்டு உள்ளார்.
இதனால் மதுவுக்கு அடிமையான ரமேஷ் நேற்று மதியம் மது போதையில் வீட்டிற்கு வந்தவர் வீட்டிற்குள் அமர்ந்து புகைப் பிடித்துள்ளார். இதனால் போதும் பொண்ணு மற்றும் அவரது குழந்தைகளுக்கு ஏற்பட்ட மூச்சுத் திணறல் காரணமாக அவர்கள் வீட்டை விட்டு வெளியே வந்தனர்.
இந்த நிலையில் ரமேஷ் கதவை தாழிட்டு தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து போதும் பொண்ணு உறையூர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து ரமேஷ் இறந்ததற்கான காரணம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.