உள்ளூர் செய்திகள்

ஆபத்தான சாலையால் வாகன ஓட்டிகள் அச்சம்- சீரமைக்க கோரிக்கை

Published On 2024-05-22 09:05 GMT   |   Update On 2024-05-22 09:05 GMT
  • தாமரைக்குப்பம் ஊராட்சிக்கு உட்பட்ட முஸ்லிம்நகர் அருகே சாலையில் அரிப்பு ஏற்பட்டு மெகா பள்ளம் ஏற்பட்டது.
  • இரவு நேரத்தில் இந்த வழியாக செல்லவே வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் அஞ்சும் நிலை ஏற்பட்டு உள்ளது.

ஊத்துக்கோட்டை:

ஊத்துக்கோட்டை அருகே உள்ள தாமரைக்குப்பம் கிராமத்தில் இருந்து முஸ்லிம்நகர் வழியாக ஆந்திர மாநிலம் நெல்லூர் அருகே உள்ள கண்டலேறு அணையில் இருந்து திறந்து விடப்படும் கிருஷ்ணா நதி நீர் தமிழக எல்லையில் வந்தடையும் பாயிண்ட் பகுதி வரை சுமார் 3 கிலோ மீட்டர் தூரத்துக்கு சாலை உள்ளது. இந்த சாலை வழியாகத்தான் மதனஞ்சேரி, தொண்டுகுழி, கண்டிகை ஆகிய கிராமங்களுக்கு வாகன போக்குவரத்து நடைபெற்று வருகிறது.

மேலும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஊத்துக்கோட்டையில் இருந்து ஜீரோ பாயிண்ட்டுக்கு இந்த சாலை வழியாகத்தான் அடிக்கடி சென்று வருகின்றனர். இந்த நிலையில் கடந்த ஆண்டு உங்களில் வங்கக்கடலில் ஏற்பட்ட மிச்சாங் புயல் காரணமாக கனமழை கொட்டி தீர்த்தது. இதனால் சாலைகளில் வெள்ளம் கரை புரண்டு ஓடியது.

இதில் தாமரைக்குப்பம் ஊராட்சிக்கு உட்பட்ட முஸ்லிம்நகர் அருகே சாலையில் அரிப்பு ஏற்பட்டு மெகா பள்ளம் ஏற்பட்டது. மேலும் தாமரைகுப்பம் - ஜீரோ பாயிண்ட் இடையே சாலையும் குண்டும் குழியு மாக மாறியது.

இந்த சாலை இதுவரை சீரமைக்கப்படாமல் ஒத்தையடி சாலையாக மாறிவிட்டது. மேலும் மண் அரிப்பு ஏற்பட்ட இடம் ஆபத்தான நிலையில் மெகா பள்ளமாக காட்சி அளிக்கிறது. இது இன்னும் மூடப்படாமல் உள்ளதால் வாகன ஓட்டிகள் இந்த சாலையில் செல்லவே அச்சம் அடைந்து வருகிறார்கள். மேலும் பள்ளத்தில் இருசக்கர வாகனஓட்டிகள் அடிக்கடி விழுந்து விபத்துக்கள் ஏற்படுகின்றன. இரவு நேரத்தில் இந்த வழியாக செல்லவே வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் அஞ்சும் நிலை ஏற்பட்டு உள்ளது.

எனவே தாமரைக்குப்பம் - ஜீரோ பாயிண்ட் இடையே குண்டும் குழியுமாக மாறிய சாலையை சீரமைத்து மெகா பள்ளத்தை மூட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தாமரைகுப்பம் மற்றும் முஸ்லிம் நகர் பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர். இது தொடர்பாக எல்லாபுரம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தும் அதிகாரிகள் எந்தவித நடவடிக்கை எடுக்கவில்லை என்று அவர்கள் குற்றம்சாட்டி உள்ளனர்.

Tags:    

Similar News