தமிழ்நாடு செய்திகள்

நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்துகிறார்- கூட்டணி குறித்து ராமதாஸ் 3-ந் தேதி அறிவிப்பு?

Published On 2026-03-01 11:06 IST   |   Update On 2026-03-01 11:06:00 IST
  • கடந்த சில நாட்களுக்கு முன் ராமதாஸ் தொண்டர்களுக்கு கடிதம் எழுதினார்.
  • பிப்ரவரி 28-ந்தேதி கூட்டணி அறிவிப்பு இருக்கும் என்றும் கூறி இருந்தார்.

திண்டிவனம்:

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாசுக்கும், அவரது மகன் அன்புமணிக்கும் இடையே கட்சி யாருக்கு சொந்தம் என்ற போட்டி நிலவி வருகிறது.

இருவரும் தனித்தனி அணியாக செயல்பட்டு வருகிறார்கள். இந்த நிலையில் அன்புமணி அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணியில் இணைந்து விட்டார்.

ஆனால் ராமதாஸ் தரப்பு பா.ம.க. எந்த அணிக்கு செல்வது என்ற முடிவு எடுக்க முடியாத நிலை உள்ளது. தி.மு.க. கூட்டணிக்கு பா.ம.க. வந்தால் நாங்கள் வெளியேறி விடுவோம் என அக்கூட்டணியில் ஏற்கனவே இடம்பெற்றுள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சி கூறி விட்டது.

அ.தி.மு.க. கூட்டணியில் அன்புமணி இடம்பெற்று உள்ளதால் அக்கூட்டணிக்கும் ராமதாஸ் தரப்பு பா.ம.க. செல்ல முடியாத நிலை உள்ளது. எனவே யாருடன் கூட்டணி அமைப்பது என்பது தொடர்பாக மாநில நிர்வாகிகள், மாவட்ட நிர்வாகிகளிடம் கருத்துக்களை கேட்டு வருகிறார்.

கடந்த சில நாட்களுக்கு முன் ராமதாஸ் தொண்டர்களுக்கு கடிதம் எழுதினார். அதில் நமது இலக்கை அடைவதற்கான வாகனம் அருகே வந்து விட்டது என கூறி இருந்தார்.

மேலும் பிப்ரவரி 28-ந்தேதி கூட்டணி அறிவிப்பு இருக்கும் என்றும் கூறி இருந்தார். ஆனால் நேற்று ராமதாஸ் எந்த முடிவையும் அறிவிக்கவில்லை.

இந்த நிலையில் நேற்று தைலாபுரம் வந்த பா.ம.க. கவுரவத் தலைவர் ஜி.கே. மணி நிருபர்களிடம் கூறும் போது, கூட்டணி பேச்சுவார்த்தை தொடர்ந்து நடைபெறுகிறது. இதுவரை இறுதி முடிவு எட்டப்படவில்லை. யாருடன் கூட்டணி என முடிவெடுக்கவில்லை என்றார்.

இதனால் தொண்டர்கள் குழப்பத்தில் இருந்து வருகிறார்கள்.

இதற்கிடையே வருகிற 3-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) ராமதாஸ் யாருடன் கூட்டணி என்பது குறித்த அறிவிப்பை வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

நாளை மறுநாள் காலை 10 மணிக்கு திண்டிவனம் தைலாபுரம் தோட்டத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞர் சங்கம், மகளிர் சங்கம், மாணவர் சங்கம், பாட்டாளி சமூக ஊடக பேரவை, மாநில, மாவட்ட, ஒன்றிய, பேரூர், நகர, மாநகர, பகுதி நிர்வாகிகள் பங்கேற்கும் கலந்தாய்வு கூட்டம் நடைபெறுகிறது.

இந்த கூட்டத்தில் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என டாக்டர் ராமதாஸ் கேட்டுக்கொண்டுள்ளார். எனவே அன்று கூட்டணி அறிவிப்பை வெளியிட வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

Tags:    

Similar News