திருப்பூரில் சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை
- ஆக்கிரமிப்புகள் அதிகரித்துள்ளதால் ஏற்படும் விபத்து அபாயம் குறித்து ஆலோசிக்கப்பட்டது.
- கோட்ட அளவிலான குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
திருப்பூர் :
திருப்பூர் மாவட்ட சாலை பாதுகாப்பு குழு கூட்டத்தில், ரோட்டோர ஆக்கிரமிப்புகள் அதிகரித்துள்ளதால் ஏற்படும் விபத்து அபாயம் குறித்து ஆலோசிக்கப்பட்டது. அதன்படி ரோட்டோர ஆக்கிரமிப்புகளை கண்டறிந்து அகற்ற வேண்டும் என்று கலெக்டர் வினீத் உத்தரவிட்டார்.
திருப்பூர் கோட்ட அளவில் ஆர்.டி.ஓ. தலைமையில் குழு அமைத்து ஆக்கிரமிப்புகளை கண்டறிந்து அந்தந்த துறைகள் மூலமாக நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது. கோட்ட அளவிலான குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்தநிலையில் திருப்பூர் கோட்ட அளவிலான ரோட்டோர ஆக்கிரமிப்பு அகற்றம் தொடர்பான ஆய்வுக்கூட்டம் ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் நடைபெற்றது.
கூட்டத்துக்கு ஆர்.டி.ஓ. பண்டரிநாதன் தலைமை தாங்கினார். மாநகராட்சி அதிகாரிகள், நெடுஞ்சாலைத்துறை, நில அளவை துறை அதிகாரிகள் பங்கேற்று ஆலோசனை நடத்தினார்கள். திருப்பூர் மாநகர காவல் ஆணையரகத்துக்கு உட்பட்ட பகுதியில் 21 இடங்களில் ரோட்டோர ஆக்கிரமிப்புகள் இருப்பது தெரியவந்துள்ளது. முறையான, முன்னறிவிப்பு செய்து ஆக்கிரமிப்புகளை அகற்றம் செய்வது குறித்து அதிகாரிகள் ஆலோசனை நடத்தினார்கள்.