உள்ளூர் செய்திகள்

தனியார் நிதி நிறுவனத்தினர் வீட்டை பூட்டியதால் தீக்குளிக்க முயன்ற பெண்

Published On 2023-11-01 08:41 GMT   |   Update On 2023-11-01 09:43 GMT
  • மன வேதனை அடைந்த அருக்காணி உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றார்.
  • சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அருக்காணியை மீட்டு பல்லடம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

  பல்லடம்:

பல்லடம் அருகே தெற்குப்பாளையம் முத்துநகரை சேர்ந்தவர் செல்வராஜ். இவருடைய மனைவி அருக்காணி (வயது 60). இவர் அங்குள்ள தனியார் நிதி நிறுவனத்தில் வீடு கட்டுவதற்கு கடன் வாங்கினார். அதனை கடந்த 4 வருடமாக மாதந்தோறும் தவணையாக பணம் செலுத்தி வந்தார்.

இ்ந்த நிலையில் இவருடைய கணவர் செல்வராஜ் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டதால் அவருடைய ஒரு கால் எடுக்கப்பட்டுள்ளது. இதனால் கடந்த 4 மாதங்களாக தவணை தொகை செலுத்தவில்லை.

இந்த நிலையில் தனியார் நிதி நிறுவன ஊழியர்கள் அருக்காணி வீட்டிற்கு வந்தனர். அப்போது அங்கு இருந்த அருக்காணியிடம் கடந்த 4 மாதமாக தவணை தொகை செலுத்தாததால் வீட்டை பூட்டப்போவதாக தெரிவித்தனர்.

இதனால் மன வேதனை அடைந்த அருக்காணி உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். உடனே அருகில் இருந்தவர்கள் தடுத்து நிறுத்தி பல்லடம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அருக்காணியை மீட்டு பல்லடம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து பல்லடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News