- எடப்பாடி அருகே கஞ்சா விற்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
- அந்த வாலிபரிடம் இருந்து கஞ்சா பொட்டலத்தை பறிமுதல் செய்த போலீசார், அவரிடம் விசாரணை நடத்தினர்.
எடப்பாடி:
சேலம் மாவட்டம் எடப்பாடி அடுத்த எட்டிக்குட்டை மேடு பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக அண்மையில் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் அந்த பகுதியில் கொங்கணாபுரம் போலீசார் மற்றும் மாவட்ட மதுவிலக்கு பிரிவு காவலர்கள் தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர்.
இந்நிலையில் நேற்று கொங்கணாபுரம் அடுத்துள்ள கட்சுப்பள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட எளவம்பாளையம் கிராமத்தில் இருந்து எட்டிகுட்டைமேடு செல்லும் வழியில் சந்தேகத்திற்கு இடமான வகைகள் சுற்றித்திரிந்த வாலிபரை போலீசார் தடுத்து நிறுத்தி சோதனை மேற்கொண்டனர்.
அந்த வாலிபரிடம் இருந்து கஞ்சா பொட்டலத்தை பறிமுதல் செய்த போலீசார், அவரிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் எளவம்பாளையம் பகுதியைச் சேர்ந்த ராஜா என்பவரின் மகன் ராஜசேகர் என்கிற பூபதி (வயது26) என்பதும் அவர் சேலம் கொண்டலாம்பட்டி பகுதியிலிருந்து கஞ்சாவினை வாங்கி வந்து, எட்டிக்குட்டை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் விற்பனை செய்ய வந்ததும் தெரியவந்தது.
இதனை அடுத்து அவரை கைது செய்த கொங்கணாபுரம் போலீசார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர் செய்து சிறையில் அடைத்தனர். தொடர்ந்து இப்பகுதியில் வேறு யாரேனும், கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வருகிறார்கள் என மாவட்ட மதுவிலக்கு பிரிவு காவலர்கள் மற்றும் கொங்கணாபுரம் போலீசார் தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.