உள்ளூர் செய்திகள்

சசிகலா சுற்றுப்பயணம் எதிரொலி- எடப்பாடி பழனிசாமி சேலத்தில் 3 நாட்கள் முகாம்

Published On 2022-09-10 06:50 GMT   |   Update On 2022-09-10 07:39 GMT
  • தொடர்ந்து 3 நாட்கள் சேலத்தில் தங்கும் எடப்பாடி பழனிசாமி சேலம் மாநகர் மற்றும் புறநகர் மாவட்ட கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்துகிறார்.
  • இனிவரும் நாட்களில் கட்சியினர் ஆற்ற வேண்டிய பணிகள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்படுகிறது.

சேலம்:

தமிழக சட்டமன்ற எதிர்கட்சி தலைவரும், அ.தி.மு.க.வின் இடைக்கால பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி இன்று காலை திருப்பதிக்கு சென்று சாமி தரிசனம் செய்தார்.

தொடர்ந்து இன்று மாலை கிருஷ்ணகிரி, தருமபுரி மாவட்டம் வழியாக சேலம் வருகிறார். அவருக்கு மாவட்ட எல்லையான தீவட்டிப்பட்டியில் சேலம் புறநகர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் இளங்கோவன் தலைமையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்படுகிறது. தொடர்ந்து சேலம் நெடுஞ்சாலை நகரில் உள்ள வீட்டிற்கு வரும் எடப்பாடி பழனிசாமிக்கு சேலம் மாநகர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் ஜி.வெங்கடாஜலம் தலைமையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்படுகிறது.

தொடர்ந்து 3 நாட்கள் சேலத்தில் தங்கும் எடப்பாடி பழனிசாமி சேலம் மாநகர் மற்றும் புறநகர் மாவட்ட கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்துகிறார். இதில் இனிவரும் நாட்களில் கட்சியினர் ஆற்ற வேண்டிய பணிகள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்படுகிறது. அப்போது அண்டை மாவட்ட கட்சியின் முக்கிய நிர்வாகிகளும் அவரை சந்தித்து பேச உள்ளனர்.

இதற்கிடையே நாளை மறுநாள் முதல் 2 நாட்கள் வி.கே.சசிகலா சேலம் மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். அப்போது முக்கிய நிர்வாகிகளை சந்தித்து பேச உள்ளதாக கூறப்படுகிறது. அதே நேரத்தில் சேலத்தில் 3 நாட்கள் தங்கி எடப்பாடி பழனிசாமி கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்த திட்டமிட்டுள்ளதால் தொண்டர்கள் மத்தியில் பரபரப்பு நிலவி வருகிறது.

Tags:    

Similar News