உள்ளூர் செய்திகள்
நிலக்கோட்டை அருகே கண்மாய் கரையை உடைத்து மண் திருடிய மர்ம நபர்கள் நடவடிக்கை எடுக்க விவசாயிகள் கோரிக்கை
- நிலக்கோட்டை அருகே நரியூத்து ஊராட்சிக்கு சொந்தமான செங்குளம் கண்மாய் ரிஷிகரடு அருகே அமைந்துள்ளது.
- மர்ம நபர்கள் ஜே.சி.பி, லாரி, டிராக்டர் மூலமாக அதிகமான மண்ணை அள்ளி கரைகளை உடைத்து சேதப்படுத்தி விட்டனர்.
நிலக்கோட்டை:
நிலக்கோட்டை அருகே நரியூத்து ஊராட்சிக்கு சொந்தமான செங்குளம் கண்மாய் ரிஷிகரடு அருகே அமைந்துள்ளது. இந்த கண்மாய் சுமார் 200 ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்டதாகும்.
ரிஷிகரடு பகுதியில் பெய்யும் மழைநீர் முழுவதும் சேர்ந்து தீர்க்கமாய் நிரப்பப்பட்டு மரியாயிபாளையம், காட்டுநாயக்கன்பட்டி, நரியூத்து உள்ளிட்ட கிராம பகுதி மக்களின் விவசாயத்திற்கும், குடிநீருக்கும் ஆதாரமாக உள்ளது.
கால்நடைகளின் குடிநீருக்காகவும் இந்த கண்மாயை பயன்படுத்தி வருகின்றனர். கடந்த 2 தினங்களுக்கு முன்பு மர்ம நபர்கள் ஜே.சி.பி, லாரி, டிராக்டர் மூலமாக அதிகமான மண்ணை அள்ளி கரைகளை உடைத்து சேதப்படுத்தி விட்டனர்.
இதை அறிந்த விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் ஒன்று திரண்டனர். அவர்கள் மண் திருடிய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.