தமிழ்நாடு

திருவள்ளுவருக்கு காவி உடை அணிவித்த கவர்னரின் செயல் கண்டிக்கத்தக்கது- ஜெயக்குமார்

Published On 2024-05-24 08:22 GMT   |   Update On 2024-05-24 08:22 GMT
  • இந்தியா கூட்டணியில் இருந்து கொண்டு முழுக்க முழுக்க தமிழ்நாட்டின் உரிமையை தாரை வார்த்து கொடுத்து இருக்கிறார்கள்.
  • சட்ட நடவடிக்கையோ கூட்டணி சார்பாக அழுத்தமோ கொடுக்க தி.மு.க தவறிவிட்டது.

சென்னை:

தமிழர் தந்தை சி.பா. ஆதித்தனாரின் 43-வது நினைவு தினத்தை முன்னிட்டு சென்னை எழும்பூரில் உள்ள அவரது திரு உருவ சிலைக்கு மாலை அணிவித்த பிறகு அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தினத்தந்தி என்ற நாளிதழை ஆரம்பித்து அதன் மூலம் பட்டித்தொட்டி எல்லாம் தமிழை பாமர மக்களும் அறிய செய்தவர் சி.பா.ஆதித்தனார். அவரது நினைவு நாளில் கழகத்தின் சார்பாக நினைவஞ்சலி செலுத்தியிருக்கிறோம்.

விவசாயத்திற்கும் சரி குடிநீருக்கும் சரி தமிழ் நாட்டைப் பொறுத்தவரை நீர் ஆதாரம் நாம் நம்பி இருப்பது கேரளாவில் இருந்து வருகின்ற சிலந்தி ஆறு கர்நாடகாவில் இருந்து வருகின்ற காவிரி ஆறு அதேபோல ஆந்திராவில் இருந்து வருகிற பாலாறு.

இந்த மூன்றும் நாம் நம்பி இருக்கிற நிலையில் அ.தி.முக. ஆட்சியில் இதற்கு உரிய நடவடிக்கை எடுத்து நமக்குரிய உரிமையை முன்னாள் முதலமைச்சர்கள் எம்ஜிஆர், ஜெயலலிதா, எடப்பாடி பழனிசாமி ஆகியோர் நிலை நாட்டினார்கள்.

இந்தியா கூட்டணியில் இருந்து கொண்டு முழுக்க முழுக்க தமிழ்நாட்டின் உரிமையை தாரை வார்த்து கொடுத்து இருக்கிறார்கள்

காவிரியில் இந்த வருடம் 50 சதவீதம் தண்ணீர் தான் கொடுக்கப்பட்டிருக்கிறது. இன்னும் 50 சதவீதத்தை கூட கேட்க பெறாத துப்பில்லாமல் விவசாயிகளுக்கு தண்ணீர் பாசனத்திற்கு வழியில்லாத வகையில் ஒட்டுமொத்த துரோகத்தையும் தி.மு.க. அரசு செய்கிறது. சட்ட நடவடிக்கையோ கூட்டணி சார்பாக அழுத்தமோ கொடுக்க தி.மு.க தவறிவிட்டது.

திருவள்ளுவரைப் பொருத்தவரை உலகப் பொதுமறை தந்தவர் உலகம் முழுவதும் அதிகமான அளவுக்கு ஒரு மொழி பெயர்க்கப்பட்ட நூல் என்றால் அது திருக்குறள். திருவள்ளுவரைப் பொருத்த வரையில் ஜாதி கிடையாது மதம் கிடையாது இனம் கிடையாது அப்படி இருக்கின்ற ஒருவரை காவி உடை அணிந்து திரு வள்ளுவரை சித்தரிப்பது ஏற்க முடியாத ஒன்று.

தற்போது திருவள்ளுவர் தினம் கொண்டாட வேண்டிய அவசியம் என்ன. தமிழினத்தையும் திருவள்ளுவரையும் அவமானப்படுத்துகிறவிதமாக தான் கவர்னரின் செயலை பார்க்க முடிகிறது. கவர்னரின் செயல் கண்டிக்கத்தக்கது ஏற்றுக்கொள்ள முடியாதது.

ஜாதி மதம் இனம் மொழி எல்லாவற்றையும் கடந்து எல்லோரையும் நேசிக்க கூடிய ஒரு மிகப்பெரிய உன்னத தலைவர் ஜெயலலிதா. அண்ணாமலை போன்றவர்கள் குண்டு சட்டியில் குதிரை ஓட்டுகிறவர்கள்.

குறுகிய எண்ணம் கொண்டவர்களின் கருத்து என்பது நிச்சயமாக யாரும் ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்று. நிராகரிக்கப்பட வேண்டிய ஒரு கருத்து.

எந்த ஆட்சி வந்தாலும் காவல்துறை ஒரே காவல்துறை தான். தி.மு.க. ஆட்சியில் ஏண்டா காக்கி சட்டை போடுறோம் என்கின்ற மனக்கஷ்டத்தில் காவலர்கள் இருக்கிறார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News