கிராம கோவில் பூசாரிகள் பேரவை கூட்டம்
- கறம்பக்குடியில் நடைபெற்றது
- இலவச மின்சாரம் வழங்க கோரிக்கை
கறம்பக்குடி,
புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி ஒன்றியம் ரெகுநாதபுரம் அருகே உள்ள பூனைக்குத்தி அய்யனார் கோவில் திடலில் ஒன்றிய அளவிலான கிராம கோவில் பூசாரிகள் பேரவை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஒன்றிய பூசாரிகள் பேரவை தலைவர் விசுவலிங்கம் தலைமை தாங்கினார். மேலும் பூசாரிகள் சங்க பேரவை மாவட்ட இணை அமைப்பாளர் திரு சங்கு முன்னிலை வகித்தார். கூட்டத்தில் வரும் 29 .1 .2023 அன்று ராமேஸ்வரத்தில் நடைபெற உள்ள மாநில கிராம கோவில் பூசாரிகள் பேரவையின் பொதுக்குழு கூட்டத்தில் திரளாக கலந்து கொள்வதெனவும், மேலும் தமிழ்நாடு அரசு அறிவித்த ஊக்கத் தொகையின் படி எல்லா கிராம கோவில் பூசாரிகளுக்கும் வழங்க வேண்டும் எனவும், அனைத்து கிராம கோவில்களுக்கும் இலவச மின்சாரம் வழங்க வேண்டும் எனவும் ஒரு மனதாக தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக மாநில கிராம கோவில் பூசாரிகள் பேரவையின் அமைப்புச் செயலாளர் சோமசுந்தரம் கலந்து கொண்டார். முடிவில் ஒன்றிய அமைப்பாளர் நன்றி கூறினார்.