தமிழ்நாடு

சவுக்கு சங்கர் ஜாமின் மனு மீதான விசாரணை 30-ந்தேதிக்கு ஒத்திவைப்பு

Published On 2024-05-27 07:00 GMT   |   Update On 2024-05-27 07:00 GMT
  • மனு நீதிபதி செங்கமலச்செல்வன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.
  • கோவையில் மற்றொரு வழக்கில் ஆஜராக செல்வதால் கால அவகாசம் கோரப்பட்டது.

மதுரை:

பிரபல யூடியூபர் சவுக்கு சங்கர் சமீபத்தில் ஒரு யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில், பெண் போலீசார் குறித்தும், போலீஸ் அதிகாரிகள் பற்றியும் பாலியல் தொடர்பான அவதூறு கருத்துகளை தெரிவித்து இருந்ததாக பல்வேறு புகார்கள் எழுந்தன.

இதையடுத்து அவர் மீது கோவை சைபர் கிரைம் போலீசார் வழக்குபதிவு செய்து, தேனியில் உள்ள தனியார் விடுதியில் தங்கி இருந்த சவுக்கு சங்கரை கடந்த 4-ந்தேதி அதிகாலையில் கைது செய்தனர். பின்னர் கோர்ட்டில் ஆஜர்படுத்திய போலீசார் அவரை கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

இதேபோல தேனியில் அவர், தனது உதவியாளர் மற்றும் டிரைவருடன் தங்கியிருந்த விடுதியில் கஞ்சா பதுக்கியதாக பழனிசெட்டிபட்டி போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். அந்த வழக்கில் சவுக்கு சங்கரை கைது செய்து, மதுரை மாவட்ட கோர்ட்டில் போலீசார் ஆஜர்படுத்தினர்.

இந்தநிலையில் அந்த வழக்கில் தனக்கு ஜாமின் கேட்டு மதுரை போதைப் பொருள் தடுப்பு சிறப்பு கோர்ட்டில் சவுக்கு சங்கர் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு நீதிபதி செங்கமலச்செல்வன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது சவுக்கு சங்கர் தரப்பு வக்கீல் இன்று ஆஜராகவில்லை. கோவையில் மற்றொரு வழக்கில் ஆஜராக செல்வதால் கால அவகாசம் கோரப்பட்டது. மேலும் கஞ்சா வைத்திருந்ததாக தொடரப்பட்ட வழக்கில் சவுக்கு சங்கருக்கு ஜாமின் வழங்க கூடாது என கூறி குறிஞ்சியர் பெண்கள் ஜனநாயக பேரவை பவானி தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதை நீதி பதி ஏற்றுக்கொண்டார். இதையடுத்து இந்த மனு மீதான விசாரணையை வருகிற 30-ந்தேதிக்கு ஒத்தி வைத்து நீதிபதி உத்தரவிட்டார்.

Tags:    

Similar News