உள்ளூர் செய்திகள்

சேலம் கல்வராயன்மலை காப்புக்காடுகளில் விலை உயர்ந்த மரங்கள் வெட்டி பலகைகளாக மாற்றி கடத்தல்

Published On 2022-07-23 10:16 GMT   |   Update On 2022-07-23 10:16 GMT
  • காப்பு காடுகளில் நன்கு வளர்ந்துள்ள மரங்களை மர்மநபர்கள் நோட்டமிட்டு, அவற்றை வெட்டி கடத்துவதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது.
  • 1095 சதுர கிமீ பரப்பளவுள்ள இம்மலைகளின் உயரம் 2000 முதல் 3000 அடி வரை உள்ளது.

சேலம்:

சேலம் மாவட்டம் கல்வ ராயன் மலைப்பகுதியில் வனத்துறைக்கு சொந்தமான காப்பு காடுகள் அதிக அளவில் உள்ளன. அங்கு தேக்கு மரம், வேம்பு, சந்தனம், சில்வர் ஓக் , மஹோகனி, வேங்கை, செம்மரம் உள்ளிட்ட பல வகையான மரங்கள் வனத்துறையினரால் பராமரிக்கப்பட்டு வருகின்றன.

இம்மலைகள் கிழக்குத் தொடர்ச்சி மலைத்தொடரின் ஒரு பகுதி ஆகும். 1095 சதுர கிமீ பரப்பளவுள்ள இம்மலைகளின் உயரம் 2000 முதல் 3000 அடி வரை உள்ளது. கல்வராயன் மலையின் தென்மேற்கு பகுதி ஆத்தூர், மேற்குப்பகுதி சங்கராபுரம் வரையும், வடதிசையில் செங்கம் வரையிலும் பரவியுள்ளது. கல்வராயன் மலையின் வடக்கே சாத்தனூர் அணைக்கட்டும், தெற்கே ஆத்தூர் கணவாயும், கிழக்கே மணிமுத்தாறு அணையும், மேற்கே சித்தேரி மலையும் அமைந்துள்ளன. கல்வராய ன்மலையடிவாரத்தில் கோமுகி அணை உள்ளது.

இந்த நிலையில் கலக்க ம்பாடி மற்றும் ஆவாரை, நாவலூர் உள்ளிட்ட மலை கிராம பகுதிகளில் உள்ள காப்பு காடுகளில் நன்கு வளர்ந்துள்ள மரங்களை மர்மநபர்கள் நோட்டமிட்டு, அவற்றை வெட்டி கடத்துவதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து வனத்துறை உயர் அதிகாரிகள், அந்த பகுதிகளுக்கு சென்று பார்த்தபோது, அங்கு விலை உயர்ந்த மரங்கள் வெட்டப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். கடத்தப்பட்ட இந்த மரங்களில் மதிப்பு பல லட்ச ரூபாய் இருக்கும் என தெரிகிறது.

மர்ம நபர்கள் கொண்டு செல்ல முடியாமல் விட்டு சென்ற சுமார் 10, 15 அடி நீளம் பலகைகள் அங்கு கிடந்தன. அவற்றை வனத்துறையினர் கைப்பற்றினர். மர்ம கும்பல் இதுவரை எத்தனை மரங்கள் வெட்டி உள்ளனர் என்பதை அதிகாரிகள் ஆய்வு வருகிறார்கள்.

விசாரணை தீவிரம்

விசாரணையில், வனத்து றையினர் காடுகளில் ரோந்து சென்று வரும் நேரத்தை மர்ம கும்பல் நோட்டமிட்டும் வனத்துறையினர் ரோந்து வராத பகுதிகளை கண்காணித்தும் நள்ளிரவில் காப்புக்காட்டுக்குள் புகுந்து இந்த விலை உயர்ந்த மரங்களை வெட்டி உள்ளனர். மேலும் மரங்கள் வெட்டும்போது அவற்றின் சத்தம் கேட்டாமல் இருக்க, கூர்மையான மிஷினை பயன்படுத்தி உள்ளனர். கிளைகளில் கயிறுகளை கட்டிக் கொண்டு அடிப்பகுதியை வெட்டி சாய்த்துள்ளனர். பின்னர் அந்த மரங்களை அங்கேயே துண்டு, துண்டுகளாக்கி பலகைகளாக செதுக்கி கடத்திச் சென்றுள்ளனர் என்பது விசாரணையில் தெரியவந்தது.

இந்த கடத்தல் சம்பவத்தில் ஈடுபட்டது யார்? என்பது குறித்து வனத்துறையினர் கலக்கம்பாடி மற்றும் ஆவாரை, நாவலூர் உள்ளிட்ட மலை கிராம பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களிடம் விசாரித்து வருகின்றனர். குறிப்பாக இந்த பலகைகளை ஆத்தூர், கள்ளக்குறிச்சி மற்றும் சேலம் உள்ளிட பகுதிகளுக்கு கொண்டு செல்லப்பட்டு விற்பனை செய்யப்படுவதாக புகார் எழுந்துள்ளது. ஆகவே அந்த பகுதிகளுக்கு சென்றும் மர்ம கும்பல் குறித்து விசாரணை நடத்த வனத்துறையினர் முடிவு செய்துள்ளனர்.

கண்காணிப்பு காமிரா

மரங்கள் வெட்டப்பட்டு கடத்தப்படுவதை தடுக்கவும், வனப்பகுதிக்குள் நுழையும் மர்ம கும்பலை உடனடியாக கண்டுபிடிக்க ஏதுவாகவும் காப்புகாடுகளை சுற்றிலும் அதிநவீன சி.சி.டி.வி. காமிராக்கள் பொருத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News