உள்ளூர் செய்திகள்
வாலிபர் கைது.

பெண்ணுக்கு தொல்லை கொடுத்த வாலிபர் கைது

Published On 2022-05-26 11:20 GMT   |   Update On 2022-05-26 11:20 GMT
மதுரையில் திருமணமான பெண்ணுக்கு தொல்லை கொடுத்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.
மதுரை

மதுரை நரிமேடு பகுதியில் திருமணமான பெண்ணை வாலிபர் நடுரோட்டில் கல்வீசி தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இதில் தொடர்புடைய குற்றவாளியை கைது செய்ய வேண்டும் என்று மாநகர போலீஸ் கமிஷனர் செந்தில்குமார் உத்தரவிட்டார். 

இதன் அடிப்படையில் மாநகர வடக்கு துணை கமிஷனர் ராஜசேகரன் மேற்பார்வையில், மதுரை ஐகோர்ட்டு உதவி கமிஷனர் ராமகிருஷ்ணன் (பொறுப்பு) ஆலோசனை பேரில், தல்லாகுளம் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டது. அவர்கள் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தினர். இதில் பாதிக்கப்பட்ட பெண் நரிமேடு பல் ஆஸ்பத்திரியில் ஊழியராக வேலை பார்ப்பது தெரியவந்தது. 

அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அவரை கல்வீசி தாக்கியது, மதுரை டி.ஆர்.ஓ காலனி, திருவள்ளுவர் நகர், ஜின்னா (வயது26) என்பது தெரியவந்தது. இவர் அந்தப்பகுதியில் மோட்டார் சைக்கிள் மெக்கானிக்காக உள்ளார். அவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். 

நரிமேடு பகுதியை சேர்ந்த அந்த பெண்ணை ஜின்னா 7 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்தார். அவருக்கு வேறு ஒருவருடன் திருமணம் ஆகி குழந்தையும் உள்ளது. ஜின்னாவால் அந்த பெண்ணை மறக்க முடியவில்லை. இந்த நிலையில் ஜின்னா அந்த பெண்ணுக்கு அடிக்கடி போன் செய்து தொல்லை கொடுத்துள்ளார். 

அந்தப்பெண் ஜின்னா வின் போன் அழைப்பை எடுக்கவில்லை. ஆத்திரம் அடைந்த ஜின்னா சம்பவத்தன்று மதியம் ஆஸ்பத்திரிக்கு வந்தார். வாசலில் நின்று கொண்டு இருந்த பெண்ணிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார் இருதரப்புக்கும் இடையே வாக்குவாதம் முற்றியது. ஆத்திரம் அடைந்த ஜின்னா, அந்த பெண்ணை அடித்து உதைத்தது மட்டுமின்றி, கல்வீசித் தாக்குதலிலும் ஈடுபட்டார் என்பது தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்தனர். 
Tags:    

Similar News