உள்ளூர் செய்திகள்
பெண் போலீசிடம் செல்போனில் ஆபாசமாக பேசிய வாலிபர்
பெண் போலீசிடம் செல்போனில் ஆபாசமாக பேசிய வாலிபரை தேடி வருகின்றனர்.
மதுரை
மதுரை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் ஆயுதப்படை பெண் போலீஸ் ஒருவர், செல்போனில் ஆபாச அழைப்புகள் வருவதாக புகார் கொடுத்து உள்ளார்.
இதில் தொடர்பு உடைய குற்றவாளியை கைது செய்ய வேண்டும் என்று மாநகர போலீஸ் கமிஷனர் செந்தில்குமார் உத்தரவிட்டார். இதன்படி மாநகர வடக்கு துணை கமிஷனர் ராஜசேகர் மேற்பார்வையில், உதவி கமிஷனர் சுரேஷ்குமார் ஆலோசனை பேரில், தல்லாகுளம் அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரியா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். இதில் திடுக்கிடும் தகவ ல் வெளியானது.
மதுரை மாநகர ஆயுதப்படை மைதானம் 11-வது படைப்பிரிவில் அந்த 25 வயது பெண், போலீசாக வேலை பார்த்து வருகிறார். மதுரை ரிசர்வ் லைன் ஆயுதப்படை போலீஸ் குடியிருப்பில் வசிக்கிறார்.
அந்தப் பெண் போலீஸ் கடந்த 12-ந் தேதி வீட்டில் தூங்கி கொண்டு இருந்தார். அவருக்கு அதிகாலை 5 மணியளவில் போன் அழைப்பு வந்தது.
மறுமுனையில் பேசியவர் அசிங்கமாகவும், ஆபாசமாகவும், பாலியல் உணர்வை தூண்டும் வகையிலும் பேசியுள்ளார். அதிர்ச்சி அடைந்த பெண் போலீஸ், ‘நான் போலீசாக உள்ளேன்’ என்று தெரிவித்தபோதிலும் அந்த வாலிபர் தொடர்ந்து ஆபாசமாக பேசி மன உளைச்சலை ஏற்படுத்தி வந்து உள்ளார்.
இது குறித்து அந்தப் பெண் போலீஸ் மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுத்தது தெரியவந்தது. இதன் அடிப்படையில் தல்லாகுளம் அனைத்து மகளிர் போலீசார் வழக்கு பதிவு செய்து, பெண் போலீஸ்காரருக்கு வந்த செல்போன் அழைப்புகள் குறித்து ஆய்வு செய்தனர்.
இதில் குற்றவாளியின் செல்போன் நம்பர் மற்றும் முகவரி தெரியவந்தது. இதன் அடிப்படையில் போலீசார், அந்த வாலிபரை தேடி வருகின்றனர்.