உள்ளூர் செய்திகள்
பிளஸ்-1 தேர்வு - திருப்பூர் மாவட்டத்தில் மாணவர்கள் ஆர்வமுடன் எழுதினர்
பிளஸ்-1 தேர்வை 91 தேர்வு மையங்களில் 217 மேல்நிலைப்பள்ளிகளில் பயிலும் 27 ஆயிரத்து 520 மாணவ-மாணவிகளும், தனித்தேர்வர்கள் 370 பேர் என மொத்தம் 27 ஆயிரத்து 890 பேர் எழுதுகின்றனர்.
திருப்பூர்:
தமிழ்நாடு அரசு தேர்வுத்துறையால் நடத்தப்படும் மேல்நிலை பொதுத்தேர்வு தேதி அறிவிக்கப்பட்டு நடந்து வருகிறது. இதில் பிளஸ்-2 மாணவ-மாணவிகளுக்கான தேர்வு கடந்த 5-ந் தேதி தொடங்கி வருகிற 28-ந் தேதி வரை நடக்கிறது. இந்நிலையில் பிளஸ்-1 மாணவ-மாணவிகளுக்கான தேர்வு இன்று (செவ்வாய்க்கிழமை) தொடங்கியது. இந்த தேர்வு வருகிற 31-ந் தேதி வரை நடக்கிறது.
திருப்பூர் மாவட்டத்தில் தேர்வு மையங்களில் பணியாற்ற முதன்மை கண்காணிப்பாளராக 91 தலைமை ஆசிரியர்களும், 91 துறை அலுவலர்களும், அறை கண்காணிப்பாளராக பணியாற்ற 1606 ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர். இதுபோல் 157 ஆசிரியர்களை கொண்ட பறக்கும் படை, காப்பி அடித்தல் உள்ளிட்டவைகளை கண்டறிய அமைக்கப்பட்டுள்ளது.
திருப்பூர் மாநகரில் ஜெய்வாபாய் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி, பழனியம்மாள் பள்ளி, நஞ்சப்பா பள்ளி மற்றும் மாவட்டத்தில் உள்ள பல்வேறு பள்ளிகளில் தேர்வு எழுத வந்த மாணவ-மாணவிகள் பள்ளி வளாகத்தில் ஆங்காங்கே அமர்ந்தபடி படித்தனர். முன்னதாக தேர்வு எழுந்த சென்ற மாணவர்களை பெற்றோர்கள்-ஆசிரியர்கள் வாழ்த்தி அனுப்பினர்.