உள்ளூர் செய்திகள்
கணவர் மீது பொய் வழக்கு போடுவதாக புகார் - தற்கொலை செய்யப்போவதாக கலெக்டர் அலுவலகத்தில் கதறிய கர்ப்பிணி பெண்.
சேலம்:
சேலம் மாவட்டம் கருமலைக்கூடல் அருகே உள்ள பி.என்.பட்டியை சேர்ந்தவர் அரவிந்த். இவரது மனைவி பிரியதர்ஷிணி (வயது22).
8 மாத கர்ப்பிணியான இவர் இன்று கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தார். பின்னர் தனது கணவர் மீது பொய் வழக்கு போடுவதாகவும், இதனால் தான் தற்கொலை செய்யப்போவதாகவும் கூறி கதறினார்.
இதனால் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு நிலவியது. இதையடுத்து அங்கு பாதுகாப்புக்கு நின்ற போலீசார் அவரை பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது அவர் கூறியதாவது:
நானும், எனது கணவரும் கடந்த 2020ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டோம்.
சேலம் மாவட்டம் வீரக்கல்புதூரை சேர்ந்த மஞ்சுநாத் என்பவர் தனது அக்கா மகனை திருமணம் செய்து கொள்ளுமாறு கடந்த 2019ம் ஆண்டு என்னிடம் கூறினார். நான் அவரை திருமணம் செய்யாததால் கருமலைக்கூடல் போலீஸ் நிலையத்தில் பொய் புகார் கொடுத்து வழக்கு பதிவு செய்தனர்.
மேலும் 2020ம் ஆண்டு எனது கணவர் செயின் பறித்து சென்றதாக அதே போலீஸ் நிலையத்தில் பொய் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
எனது கணவர் கூலி வேலைக்கு சென்று பிழைப்பு நடத்தி வருகிறோம், தவறான வழக்குகளால் நாங்கள் தவித்து வருகிறோம், இதனால் தற்கொலை செய்வதை தவிர வேறு வழியில்லை என்று கூறினார். இதையடுத்து அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.