உள்ளூர் செய்திகள்
ராம நவமியை முன்னிட்டு சீதா திருக்கல்யாணம் திரளான பக்தர்கள் பங்கேற்பு
சேலம் கோட்டை அழகிரிநாதர் கோவிலில் ராம நவமியை முன்னிட்டு சீதா திருக்கல்யாணம் திரளான பக்தர்கள் பங்கேற்பு
சேலம்:
சேலம் பழைய பேருந்து நிலையம் அருகே பழமை வாய்ந்த கோட்டை அழகிரி நாதர் கோவிலில் கடந்த 4ந் தேதி ராமநவமி உற்சவம் தொடங்கியது. தொடர்ந்து தினந்தோறும் ராமருக்கு பல்வேறு விதமான சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன.
இதன் முக்கிய நிகழ்வான சீதாப்பிராட்டி திருக்கல்யாண வைபவம் இன்று நடைபெற்றது. இதையொட்டி அதிகாலையில் வெங்கடேச பெருமாளுக்கும் லட்சுமி தாயாருக்கும் சிறப்பு அபிஷேகம் அலங்காரம் செய்யப்பட்டது.
தொடர்ந்து சீதாபிராட்டி ராமபிரானுக்கு பல்வேறு வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு பட்டாடை உடுத்தி பல்வேறு விதமான வாசனை மலர்களால் அலங்கரிக்கப்பட்டது. பின்னர் சீதாபிராட்டி ராமபிரானுக்கு கங்கன கயிறு கட்டப்பட்டு ஹோமங்கள் நடைபெற்றன.
பூர்ணாஹுதி முடிந்தவுடன் பக்தர்கள் முன்னிலையில் மாங்கல்ய தாரணம் வைபவம் நடைபெற்றது. சுதர்சன பட்டாச்சாரியார் உள்ளிட்ட குருக்கள் வேதங்கள் முழங்க மங்கள வாத்தியம் இசைக்க பக்தர்கள் முன்னிலையில் மாங்கல்யம் காண்பிக்கப்பட்டு பிறகு திருக்கல்யாணம் நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது பக்தர்கள் ராமா ராமா ராமா என கோஷங்கள் எழுப்பி வழிபட்டனர்.
இதனைத் தொடர்ந்து ராமபிரானுக்கு சீதாபிராட்டி மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டு பின்னர் பூஜையில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு மாங்கல்யம், அன்னதானம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சி ஏற்பாட்டினை கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்