உள்ளூர் செய்திகள்
பகுதி நேர பணிக்கு மருத்துவர்கள் தேர்வு
10க்கும் மேல் சிகிச்சையளிக்கும் நோயாளிக்கு தலா ரூ.200 என்ற அடிப்படையில் ஊதியம் வழங்கப்படும்.
திருப்பூர்:
திருப்பூர் மாநகராட்சியில் தேசிய நகர்ப்புற சுகாதார திட்டத்தில் 3 பாலி கிளினிக் மையங்கள் செயல்படுகின்றன.
இவற்றில் மாலை 4:30 முதல் 8:30 மணி வரை பகுதி நேர மருத்துவர்கள் பணிக்கு உரிய தகுதியுடையோர் வரும் 31-ந் தேதிக்குள், மாநகராட்சி நலச் சங்கம், மாநகராட்சி அலுவலகம் என்ற முகவரியில் விண்ணப்பிக்கலாம்.
பொது மருத்துவர், மகப்பேறு மருத்துவர், குழந்தை நலம், கண் நலம், தோல் மருத்துவர், எலும்பு-மூட்டு, காது மூக்கு தொண்டை, மனநலம் உள்ளிட்ட சிறப்பு மருத்துவர்கள் வாரத்தில் ஒரு நாள் மட்டும் என்ற அடிப்படையில் பணியாற்றலாம்.
இப்பணிக்கு நாளொன்றுக்கு குறைந்த பட்சம் 10 நோயாளிகள் வரை ரூ.2000 தொகுப்பூதியம், 10க்கும் மேல் சிகிச்சையளிக்கும் நோயாளிக்கு தலா ரூ.200 என்ற அடிப்படையில் வழங்கப்படும்.
உரிய பிரிவில் தகுதி பெற்ற சிறப்பு மருத்துவர்கள் அல்லது முதுநிலையில் 2 மற்றும் 3ம் ஆண்டு மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.