உள்ளூர் செய்திகள்
மொரப்பூர் அருகே ரெயில் முன் பாய்ந்து வாலிபர் தற்கொலை
மொரப்பூர் அருகே தந்தை இறந்த சோகத்தில் மகன் ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.
மொரப்பூர்:
தருமபுரி மாவட்டம் மொரப்பூர் அருகே உள்ளது தாசரஹள்ளி கிராமம். இந்த கிராமத்தைச் சேர்ந்தவர் காளியப்பன் மகன் ஹரிஷ் (வயது 22). இவர் ஈரோட்டில் உள்ள ஒரு ஐ.டி.ஐ.யில் படித்து வருகிறார்.
இந்த நிலையில் அவரது தந்தை கடந்த ஓராண்டுக்கு முன்பு இறந்து விட்டார். தந்தை இறந்த பிறகு எப்போதும் தனது தந்தையின் நினைவாகவே இருந்துள்ளார். நேற்று முன்தினம் மாலை வீட்டில் இருந்து சென்றவர் வெகுநேரமாகியும் வீடு திரும்பவில்லை.
இதனால் பதட்டம் அடைந்த அவரது தாயார் நாகம்மாள் பல இடங்களில் தேடி பார்த்தார். ஆனால் ஹரிஷ் பற்றிய தகவல் ஏதும் கிடைக்கவில்லை.
இந்நிலையில் அதிகாலை அப்பியம்பட்டி பிரிவு சாலை அருகே சேலம்-மொரப்பூர் செல்லும் ரெயில் பாதையில் ஹரிஷ் ரெயிலில் அடிபட்டு இறந்து கிடப்பதாக ரெயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் சேலம் ரெயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கோபண்ணா விரைந்து சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.
மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து ஹரிஷ் தனது தந்தை இறந்த சோகத்தில் ரெயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது ரெயில்வே பாதையை கடக்கும் பொழுது எதிர்பாராதவிதமாக ரெயில் மோதி இருந்தாரா? என ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.