உள்ளூர் செய்திகள்

லஞ்சம் வாங்கிய நகராட்சி பெண் அதிகாரி கைது

Published On 2024-04-26 09:36 GMT   |   Update On 2024-04-26 09:36 GMT
  • ஜோதிமணி லஞ்சம் வாங்கி பிடிபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
  • போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஸ்ரீவில்லிபுத்தூர்:

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் நல்ல குற்றாலம் தெருவை சேர்ந்தவர் வாசுதேவன் (வயது 48). இவர் ஆட்டோ ஓட்டும் தொழில் செய்து வருகிறார். இவருக்கு சொந்தமான இடம் ஸ்ரீவில்லிபுத்தூர் சிங்கமாடத்தெரு பகுதியில் உள்ளது. அதில் வீடு கட்ட அவர் முடிவு செய்தார்.

இதையடுத்து நகராட்சியில் கட்டிட பிளான் அலுவலகத்தில் கட்டிட அமைப்பு வரைவு ஆய்வாளர் ஜோதி மணி (56) என்பவரிடம் முறையாக அனுமதி கோரி மனு செய்துள்ளார். மேலும் அரசுக்கு செலுத்த வேண்டிய கட்டணத்தையும் முறைப்படி செலுத்தி உள்ளார்.

இது தொடர்பாக நேற்று கட்டிட அமைப்பு வரைபட ஆய்வாளர் ஜோதி மணியை அணுகியபோது, அவர் கட்டிட வரைபட அனுமதி கிடைக்க வேண்டும் என்றால் தனக்கு ரூ.10 ஆயிரம் லஞ்சம் தர வேண்டும் என கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த வாசுதேவன் லஞ்சம் கொடுக்க விருப்பமின்றி விருதுநகரில் உள்ள லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலகத்திற்கு சென்று கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ராமச்சந்திரன், இன்ஸ்பெக்டர் பூமிநாதன் சால்வன் துரை ஆகியோரிடம் புகார் அளித்தார்.

அந்த புகார் அடிப்படையில் இன்று லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் அவர்கள் அறிவுரைப்படி ரசாயணம் தடவிய பணத்தை வாசுதேவனிடம் கொடுத்து அனுப்பினர். இந்தநிலையில் இன்று காலை வாசுதேவன் லஞ்ச பணத்துடன் நகராட்சி அலுவலகத்திற்கு சென்றார்.

அப்போது அங்கு பணியில் இருந்த ஜோதிமணி, நகரமைப்பு பிரிவு அலுவலகத்தில் வைத்து தருமாறு கூறியுள்ளார். இதையடுத்து ரூ.10 ஆயிரம் பணத்தை ஜோதிமணி பெற்றுக்கொண்டபோது, அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் அவரை கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர்.

தொடர்ந்து அவரிடம் தனி அறையில் வைத்து போலீசார் அதிரடியாக விசாரணை நடத்தி வருகிறார்கள். ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சி அலுவலகத்தில் பெண் அதிகாரி ஜோதிமணி லஞ்சம் வாங்கி பிடிபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News