தமிழ்நாடு செய்திகள்

தட்டுப்பாடு வதந்தியால் 3-வது நாளாக கூட்டம்: பாட்டில்களில் பெட்ரோல் விற்பதற்கு தடை: பங்க்குகளுக்கு அதிரடி உத்தரவு

Published On 2026-03-13 13:34 IST   |   Update On 2026-03-13 13:34:00 IST
  • சில ஓட்டல்களில் சமையலுக்கு பயன்படுத்தும் கியாசுக்கும் சேர்த்து பில் போட்டு உள்ளனர்.
  • தமிழகம் முழுவதும் பல மாவட்டங்களில் பெட்ரோல் பங்க்குகளில் வாகன ஓட்டிகள் அலைமோதி வருகிறார்கள்.

சென்னை:

அமெரிக்கா, இஸ்ரேல் ஆகிய நாடுகள் ஈரான் மீது தொடுத்துள்ள போர் காரணமாக வளைகுடா நாடுகளில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது.

இதன் காரணமாக கச்சா எண்ணெய் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் வணிக சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக ஓட்டல்களுக்கு வழங்கப்படும் வணிக சிலிண்டர் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

வீடுகளில் சமையலுக்கு பயன்படுத்தக் கூடிய சிலிண்டர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுவிடக்கூடாது என்கிற எண்ணத்திலேயே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு இருக்கிறது.

வணிக சிலிண்டர் வினியோகத்தில் ஏற்பட்டுள்ள இந்த பாதிப்பின் காரணமாக ஓட்டல் தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. ஓட்டல்களில் விற்பனை செய்யப்படும் உணவுப் பொருட்களின் வகைகள் குறைக்கப்பட்டுள்ளன.

ஓட்டல் உணவுகளின் விலையும் உயர்ந்துள்ளது. சில ஓட்டல்களில் சமையலுக்கு பயன்படுத்தும் கியாசுக்கும் சேர்த்து பில் போட்டு உள்ளனர்.

வணிக சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக சமையல் சிலிண்டர்களுக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுவிடுமோ என்கிற அச்சத்தில், தமிழகம் முழுவதும் பலர் கியாஸ் ஏஜெண்சிகளை முற்றுகையிட்டு சிலிண்டர்களை பெறுவதில் ஆர்வம் காட்டி வருகிறார்கள்.

இதுபோன்ற சூழலில் கியாஸ் சிலிண்டரை போன்று பெட்ரோல்-டீசலுக்கும் தட்டுப்பாடு ஏற்பட போவதாகவும், இதனால் பெட்ரோல், டீசலின் விலை அதிரடியாக உயர வாய்ப்புள்ளது என்றும் நேற்று முன்தினம் மாலையில் திடீரென வதந்தி பரவியது.

இதன் காரணமாக வாகன ஓட்டிகள் பெட்ரோல் பங்க்குகளுக்கு படையெடுத்தனர். தங்களது வாகனங்களுக்கு பெட்ரோல் போட்டது போக, கேன் மற்றும் பாட்டில்களிலும் பெட்ரோல் மற்றும் டீசலை பிடித்து சென்றனர்.

இதனை தொடர்ந்து எண்ணெய் நிறுவனங்கள் சார்பிலும் பெட்ரோல்-டீசல் பங்க் உரிமையாளர்கள் சங்கத்தினரும் தமிழகத்தில் பெட்ரோல், டீசல் வினியோகத்தில் எந்தவித தட்டுப்பாடும் இல்லை. எனவே பொதுமக்கள் அது தொடர்பாக பீதியடைந்து பெட்ரோல் பங்க்குகளில் மொத்தமாக குவிய வேண்டாம் என்று வேண்டுகோள் விடுத்தனர்.

இருப்பினும் நேற்று பகலில் பல இடங்களில் பெட்ரோல் பங்க்குகளில் கூட்டம் அலைமோதியது. இன்று 3-வது நாளாக சென்னை உள்பட தமிழகம் முழுவதும் பல மாவட்டங்களில் பெட்ரோல் பங்க்குகளில் வாகன ஓட்டிகள் அலைமோதி வருகிறார்கள்.

இதனை கருத்தில் கொண்டு பெட்ரோல் பங்க்குளில் கேன் மற்றும் பாட்டில்களில் பெட்ரோல்-டீசல் விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் சங்கத் தலைவர் முரளி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் கூறும்போது, "பெட்ரோல் பங்க்குகளில் வாகனங்களில் தேவையான அளவுக்கு பெட்ரோல் மற்றும் டீசலை விற்பனை செய்யலாம் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது. அதே நேரத்தில் கேன்கள் மற்றும் பாட்டில்களில் பெட்ரோல்-டீசலை விற்பனை செய்யக்கூடாது என்று அறிவுறுத்தி இருக்கிறோம். இதனை அனைத்து பங்க் உரிமையாளர்களும் முழுமையாக கடைபிடிக்க தொடங்கி உள்ளனர்" என்றார்.

அதே நேரத்தில் பெட்ரோல் பங்க்குகளில் கேன் மற்றும் பாட்டில்களில் எப்படியாவது பெட்ரோல் மற்றும் டீசலை வாங்கிச் செல்ல வேண்டும் என்பதில் பொதுமக்கள் சிலர் உறுதியாக இருந்து தகராறில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இதனை கருத்தில் கொண்டு பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் அந்தந்த பகுதிகளில் உள்ள போலீஸ் நிலையங்களில் பாதுகாப்பு கேட்டுள்ளனர். இதனை ஏற்றுக்கொண்டு பெட்ரோல் நிலையங்கள் சிலவற்றில் போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் கூறும்போது, பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு ஏற்படவில்லை. வாகனங்களுக்கு தேவைப்படும் அளவுக்கு பெட்ரோல்-டீசல் இருப்பு உள்ளது. எனவே, வாகனங்களுக்கு மட்டும் பெட்ரோல் போடுவதற்கு முடிவு செய்துள்ளோம். பொதுமக்கள் கேன்களை தூக்கிக் கொண்டு பெட்ரோல் பங்க்குகளுக்கு வர வேண்டாம் என்று கேட்டுக்கொண்டுள்ளனர்.

தமிழகம் முழுவதும் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு பீதி 3-வது நாளாக நீடிப்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News