உள்ளூர் செய்திகள்
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நிலவரம்- சென்னையில் தினசரி பாதிப்பு 9 ஆயிரத்தை நெருங்கியது
தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 23,459 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், 9,026 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டுள்ளனர்.
சென்னை:
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நிலவரம் தொடர்பாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை இன்று மாலை அறிக்கை வெளியிட்டுள்ளது. அதன்படி, தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 1,53,046 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டதில், 23,459 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது.
மாநிலத்தில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 28 லட்சத்து 91 ஆயிரத்து 959 ஆக அதிகரித்துள்ளது. பாதிப்பு விகிதம் 15.3 சதவீதமாக உள்ளது.
சென்னையில் தினசரி பாதிப்பானது 9000-ஐ நெருங்கி உள்ளது. இன்று 8963 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. செங்கல்பட்டில் 2504 பேருக்கும், கோவையில் 1564 பேருக்கும், காஞ்சிபுரத்தில் 802 பேருக்கும், கன்னியாகுமரியில் 572 பேருக்கும், திருவள்ளூரில் 1393 பேருக்கும், மதுரையில் 631 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இன்று ஒரே நாளில் 9,026 பேர் சிகிச்சைக்கு பின் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 27 லட்சத்து 36 ஆயிரத்து 986 ஆக உயர்ந்துள்ளது.
கொரோனா வைரஸ் பாதிப்பினால் இன்று ஒரே நாளில் 26 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 36,956 ஆக உயர்ந்துள்ளது. தமிழகம் முழுவதும் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 1,18,017 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் புதிதாக யாருக்கும் ஒமிக்ரான் பாதிப்பில்லை. மொத்த எண்ணிக்கை 241ஆகவே உள்ளது.