உள்ளூர் செய்திகள்
பாத யாத்திரை பக்தர்கள் ஓய்வெடுக்க வசதி செய்து தர கோரிக்கை
பாத யாத்திரை பக்தர்கள் ஓய்வெடுக்க வசதியாக சாலையோரத்தில் குடில்கள் அமைத்து தர வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வாடிப்பட்டி
மதுரை மாவட்டம் சமயநல்லூர் போலீஸ் போக்குவரத்து காவல் சரக எல்லைக்குட்பட்ட பரவை கொண்டமாரி பாலம் தொடங்கி, பரவை, நகரி, அய்யங்கோட்டை, தனிச்சியம், வடுகபட்டி, ஆண்டிபட்டி, வாடிப்பட்டி, பாண்டியராஜபுரம் வழியாக பழனிக்கு பாதயாத்திரை செல்லும் பக்தர்கள் தினந்தோறும் அதிகரித்து வருகின்றனர். குறிப்பாக பெண்கள் அதிகமாக வருகின்றனர்.
காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை சாலையோரம் உள்ள மரநிழல்கள், தற்காலிக குடில்கள், கோவில்களில் தங்கிவிட்டு பின் பயணத்தை தொடர்கின்றனர்.இதனை கருத்தில் கொண்டு பக்தர்கள் வசதிக்காக பல ஆண்டுகளாக வாடிப்பட்டி பகுதியில் தாலுகா அலுவலகம் அருகில் புளிந்தோப்பு, போலீஸ் நிலையம், பேரூராட்சி அலுவலகம் இரண்டிலும் மணல் நிரப்பப்பட்ட தற்காலிக பந்தல் அமைக்கப்படுவது வழக்கம். இங்கு பக்தர்கள் தங்கி ஓய்வெடுத்து செல்வார்கள்.
ஆனால் தற்போது 2 இடங்களிலும் பந்தல் அமைக்கப்படவில்லை. மேலும் முன்பு போக்குவரத்து போலீசார் பாதயாத்திரை பக்தர்களுக்கு சாலை விதிகளை பின்பற்றி நடக்க வழியுறுத்தி துண்டு பிரசுரம் வழங்கி கூட்டம் அதிகமாக வரும் முக்கிய நேரங்களில் ரோந்து சென்று ஒழுங்குபடுத்துவார்கள். ஆனால் தற்போது எதுவும் செய்யவில்லை. இதனால் கடந்த சிலவாரங்களில் மட்டும் இந்த பகுதியில் 15-க்கும் மேற்பட்ட சாலை விபத்துக்கள் ஏற்பட்டு 6 பேர் வரை உயிரிழந்துள்ளனர்.
எனவே சாலை பாதுகாப்பை கண்காணிக்கும் போக்குவரத்து காவல் மற்றும் போலீசார் பக்தர்களுக்கு ஓய்வெடுக்கும் பந்தல் அமைத்து உதவிடவேண்டும் என்றும், முன்பு போல் பக்தகள் அதிகமாக நடந்துவரும் நேரங்களில் சாலை விதிகளை பின்பற்ற விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வழங்கி பிரசாரம் செய்யவேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.