செய்திகள்
ஊரடங்கால் லாரி உரிமையாளர்களுக்குதினமும் ரூ.5கோடி இழப்பு
பனியன் நிறுவன பண்டல்கள் மாவட்டத்துக்குள் எடுத்து செல்ல அனுமதிக்கப்பட்டன.
திருப்பூர்:
கொரோனா தடுப்பு ஊரடங்கு காரணமாக மாநிலம் விட்டு மாநிலம், மாவட்டத்தில் இருந்து வேறு பகுதிக்கு லாரிகள் செல்ல தடை அமலில் இருந்தது. இதனால் அத்தியாவசிய தேவைக்கான 40 சதவீத லாரிகள் மட்டுமே இயங்கியது.
திருப்பூரில் கோழிப்பண்ணை பொருட்கள், அரிசி, கோதுமைகளை எடுத்து செல்ல லாரிகள் இயங்கியது. சிறப்பு அனுமதி வழங்கப்பட்டதால் மகாராஷ்டிரா, குஜராத்தில் இருந்து நூல்கள் லாரி மூலம் எடுத்து வரப்பட்டது.பனியன் நிறுவன பண்டல்கள் மாவட்டத்துக்குள் எடுத்து செல்ல அனுமதிக்கப்பட்டன. இந்த பிரச்சினைகளால் லாரி உரிமையாளர்களுக்கு வாடகை கிடைக்காமல் இழப்பு ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து லாரி உரிமையாளர் சங்க தலைவர் ராமசாமி கூறுகையில், மாவட்டத்தில் மொத்தமுள்ள 8,000 லாரிகளில் கடந்த ஒரு மாதமாக 2,500 லாரி மட்டும் இயங்குகிறது. நகருக்குள் 150 லாரிகளே ஓடுகிறது. இதனால் நாள் ஒன்றுக்கு ரூ.5 முதல் ரூ.8கோடி வீதம் வரை இழப்பு ஏற்பட்டுள்ளது என்றார்.