சங்கரன்கோவிலில் போலீஸ் நிலையம் முன்பு தீக்குளிக்க முயன்ற தொழிலாளி
சங்கரன்கோவில்:
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள அச்சம்பாடு மெயின்ரோட்டை சேர்ந்தவர் சீனிபாண்டி(வயது 35), கூலி தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் வேலைக்கு சென்றுவிட்டு சுரண்டை-சங்கரன்கோவில் சாலையில் மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார்.
அப்போது அங்கு வாகன சோதனையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த சங்கரன்கோவில் டவுன் போலீசார் அவரை வழி மறித்து உள்ளனர். அவரை சோதனை செய்தபோது அவர் குடிபோதையில் மோட்டார் சைக்கிள் ஓட்டி வந்துள்ளார் என்பது தெரியவந்தது.
இதனால் மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்த போலீசார், சீனிபாண்டிக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்தனர். இதில் மனம் உடைந்த சீனிபாண்டி நேற்று டவுன் போலீஸ் நிலையத்திற்கு சென்றுள்ளார்.
தனது மோட்டார் சைக்கிளை ஒப்படைக்குமாறு அவர் போலீசாரிடம் கேட்டுள்ளார். ஆனால் அபராதம் செலுத்திய பின்னரே ஒப்படைப்பதாக போலீசார் தெரிவித்ததால் மனமுடைந்த சீனிபாண்டி அங்கிருந்து வெளியே வந்தார். பின்னர் போலீஸ் நிலையம் முன்பு நின்று, தான் மறைத்து வைத்திருந்த மண்எண்ணை கேனை எடுத்து தலையில் ஊற்றி தற்கொலைக்கு முயன்றார்.
உடனே அங்கிருந்த போலீசார் ஓடி வந்து அவரிடம் இருந்து மண்எண்ணை கேனை பிடுங்கினர். பின்னர் அவரது தலையில் நீரை ஊற்றி காப்பாற்றினர். இதையடுத்து அவர் மீது தற்கொலைக்கு முயன்றதாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.