செய்திகள்
திருச்செங்கோட்டில் கார் கவிழ்ந்து முதியவர் படுகாயம்
திருச்செங்கோட்டில் தடுப்பு சுவரில் மோதி கார் கவிழ்ந்த விபத்தில் முதியவர் படுகாயம் அடைந்தார்.
எலச்சிபாளையம்:
நாமக்கல் மாவட்டம் கருந்தேவம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் சண்முகம் (வயது 64). இவர் நேற்று தன்னுடைய காரில் திருச்செங்கோட்டில் உள்ள சேலம் ரோடு கார்னர் பிரிவு சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவர் குடிபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது. அந்த சமயம் கார் சண்முகத்தின் கட்டுப்பாட்டை இழந்து தறிகெட்டு ஓடி சாலையின் நடுவில் உள்ள தடுப்பு சுவரில் பயங்கரமாக மோதி கவிழ்ந்தது.
இந்த விபத்தில் சண்முகத்தின் மூக்கு பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அக்கம்பக்கத்தினர் சண்முகத்தை மீட்டு சிகிச்சைக்காக திருச்செங்கோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்து வந்த திருச்செங்கோடு போலீசார் கவிழ்ந்து கிடந்த காரை அப்புறப்படுத்தினர். மேலும் இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.