தமிழ்நாடு

ஊட்டி தாவரவியல் பூங்காவில் பூத்துக்குலுங்கும் மலர்களை கண்டு சுற்றுலா பயணிகள் உற்சாகம்

Published On 2024-05-02 04:09 GMT   |   Update On 2024-05-02 04:09 GMT
  • கடந்த 2 நாட்களில் ஊட்டி தாவரவியல் பூங்காவை 50 ஆயிரம் சுற்றுலா பயணிகள் பார்வையிட்டதாக பூங்கா ஊழியர்கள் தெரிவித்தனர்.
  • ஊட்டி ரோஜா பூங்காவில் 4 ஆயிரம் ரகங்களில் 30 ஆயிரம் ரோஜா செடிகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன.

ஊட்டி:

தமிழகத்தில் உள்ள சுற்றுலா தலங்களிலேயே மிக முக்கியமான சுற்றுலா தலமாக நீலகிரி மாவட்டம் ஊட்டி உள்ளது.

இங்கு நிலவும் குளுகுளு காலநிலையை அனுபவிப்பதற்காக வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் ஊட்டிக்கு வந்து செல்கிறார்கள். குறிப்பாக ஏப்ரல், மே மாதங்களில் நிலவும் கோடை சீசனை அனுபவிக்க லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள் ஊட்டிக்கு வருவது வழக்கம். இந்த ஆண்டுக்கான கோடை சீசன் தொடங்கி உள்ள நிலையில், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் கோடை வெயில் சுட்டெரித்து வருகிறது. இதன் காரணமாக வெயிலில் இருந்து தப்பிக்கவும், கோடை கால விடுமுறையை கொண்டாடவும் ஊட்டிக்கு சுற்றுலா பயணிகள் படையெடுத்த வண்ணம் உள்ளனர்.

இதேபோல் கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து சுற்றுலா தலங்களை பார்வையிட்டு ரசித்து செல்கிறார்கள்.

மே தின விடுமுறையை கொண்டாடும் வகையில் கடந்த 30-ந்தேதி முதலே சுற்றுலா பயணிகள் ஊட்டியில் குவிந்தனர். நேற்று காலையும் ஏராளமான சுற்றுலா பயணிகள் கார்கள், வேன், பஸ் போன்ற வாகனங்களில் ஊட்டிக்கு வந்தனர்.

இதனால் நேற்று ஊட்டி தாவரவியல் பூங்கா, படகு இல்லம் மற்றும் ரோஜா பூங்கா, தொட்டபெட்டா மலைசிகரம் உள்ளிட்ட சுற்றுலா தலங்களில் மக்கள் கூட்டம் அலைமோதியது.

ஊட்டி தாவரவியல் பூங்காவில் குவிந்த மக்கள், அங்கு மலர் மாடங்களில் அடுக்கி வைக்கப்பட்டுள்ள மலர் செடிகளில் பூத்து குலுங்கிய பூக்களை கண்டு ரசித்து, அதன் முன்பு நின்று புகைப்படமும் எடுத்து கொண்டனர்.

50 ஆயிரம் பேர் பார்வையிட்டனர். மாலை நேரத்தில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்தது. அவர்கள் அங்குள்ள புல்தரையில் குடும்பத்தினருடன் அமர்ந்து பேசி, குழந்தைகளுடன் விளையாடி மகிழ்ந்து பொழுதை கழித்தனர்.

கடந்த 2 நாட்களில் ஊட்டி தாவரவியல் பூங்காவை 50 ஆயிரம் சுற்றுலா பயணிகள் பார்வையிட்டதாக பூங்கா ஊழியர்கள் தெரிவித்தனர்.

ஊட்டியில் உள்ள அனைத்து ஓட்டல்கள், லாட்ஜ்கள் மற்றும் தங்கும் விடுதிகள் சுற்றுலா பயணிகளால் நிரம்பி வழிகின்றன. தொடர்ந்து அதிகளவிலான சுற்றுலா வாகனங்கள் வந்து கொண்டே இருப்பதால், போக்குவரத்து பாதிக்காத வகையில் ஊட்டி நகரில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டது.

ஊட்டி ரோஜா பூங்காவில் 4 ஆயிரம் ரகங்களில் 30 ஆயிரம் ரோஜா செடிகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. கோடை மழை பெய்யாத நிலையில் செடிகளுக்கு தண்ணீர் பாய்ச்சப்பட்டு வருகிறது.

தற்போது காலதாமதமாக பூங்காவில் பசுமை திரும்பி, ரோஜா மலர்கள் பூத்து குலுங்குகின்றன. ஊட்டிக்கு சுற்றுலா வந்த பயணிகள் ரோஜாபூங்காவில் பூத்து குலுங்கிய ரோஜா மலர்களையும் ஆர்வத்துடன் கண்டு ரசித்தனர். பலர் பூக்களுடன் நின்று செல்பி எடுத்தும் மகிழ்ந்தனர்.

இந்த ஆண்டுக்கான மலர் கண்காட்சி தாவரவியல் பூங்காவில் வருகிற 10-ந்தேதி தொடங்கி 20-ந்தேதி வரை நடக்கிறது. வழக்கமாக ஒரு வாரத்துக்கு மட்டுமே மலர் கண்காட்சி நடத்தப்படும். முதன்முறையாக தற்போது 10 நாட்கள் மலர் கண்காட்சி நடத்தப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது.

வெயிலின் தாக்கத்தில் இருந்து மலர் செடிகளையும், மலர்களையும் பாதுகாக்க பூங்கா ஊழியர்கள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். அவ்வப்போது தண்ணீரை தெளித்து மலர்ச்செடிகளை பாதுகாத்து வருகிறார்கள்.

Tags:    

Similar News