செய்திகள்
லாரியுடன் பறிமுதல் செய்யப்பட்ட ரேஷன் அரிசி மூட்டைகளை காணலாம்.

நாமக்கல் அருகே 20 டன் ரேஷன் அரிசி லாரியுடன் பறிமுதல்- 2 பேர் கைது

Published On 2020-09-07 10:50 GMT   |   Update On 2020-09-07 10:50 GMT
நாமக்கல் அருகே 20 டன் ரேஷன் அரிசி லாரியுடன் பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக 2 பேரை குற்றப்புலனாய்வுத்துறை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாமக்கல்:

தஞ்சாவூரில் இருந்து லாரியில் நாமக்கல்லுக்கு ரேஷன் அரிசி கடத்தி வரப்படுவதாக மாவட்ட கலெக்டர் மெகராஜூக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அவரது உத்தரவின் பேரில் மாவட்ட வழங்கல் அலுவலர் பரந்தாமன் தலைமையில் பறக்கும் படையினர் நேற்று நாமக்கல் அருகே உள்ள கணவாய்பட்டி பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

காலை 6 மணி அளவில் அந்த வழியாக வந்த லாரியை நிறுத்தி சோதனை செய்தபோது அதில் மூட்டைகளில் 20 டன் ரேஷன் அரிசி கடத்தி வருவது தெரியவந்தது. அதில் 3 டன் ரேஷன் அரிசி முழுமையாகவும், 17 டன் உடைக்கப்பட்டதாகவும் இருந்தன. இதையடுத்து 20 டன் ரேஷன் அரிசியையும் அதிகாரிகள் லாரியுடன் பறிமுதல் செய்தனர். பின்னர் அவை நாமக்கல்லில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபகழக கிடங்கில் வைக்கப்பட்டது.

மேலும் லாரியை ஓட்டி வந்த டிரைவர் ராஜப்பா (வயது 35) என்பவரை அதிகாரிகள், நாமக்கல் குற்றப்புலனாய்வுத்துறை போலீசாரிடம் ஒப்படைத்தனர். அவரை கைது செய்த போலீசார் அவரிடம் நடத்திய விசாரணையில் தஞ்சாவூரில் இருந்து நாமக்கல்லில் உள்ள கோழிப்பண்ணைக்கு ரேஷன்அரிசி கொண்டு வந்தது தெரியவந்தது. இதையடுத்து அரிசியை தஞ்சாவூரில் இருந்து ஏற்றிவிட்ட விஜி (42) என்பவரையும் குற்றப்புலனாய்வுத்துறை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News