தூத்துக்குடியில் பெண்ணிடம் நகை பறிப்பு- வாலிபர்களுக்கு வலைவீச்சு
தூத்துக்குடி:
தூத்துக்குடி முனியசாமி கோவில் தெருவை சேர்ந்தவர் மூக்காண்டி. இவரது மனைவி சோமசுந்தரி (வயது 38). இவர் நேற்று முன்தினம் கடைக்கு சென்றுவிட்டு திரும்பி வந்து கொண்டிருந்தார். அவர் முனியசாமி கோவில் 1-ம் தெருவில் நடந்து வந்து கொண்டிருந்தபோது 2 வாலிபர்கள் மோட்டார் சைக்கிளில் வந்துள்ளனர்.
அவர்கள் இருவரும் தனியாக நடந்து சென்ற சோமசுந்தரியின் கழுத்தில் கிடந்த 5 பவுன் தங்க செயினை நோட்டமிட்டனர். பின்னர் அவரிடம் விலாசம் கேட்பதுபோல் சென்ற 2 வாலிபர்களும் சோமசுந்தரியின் கழுத்தில் கிடந்த தங்க செயினை பறித்தனர். உடனே சோமசுந்தரி கத்தி கூச்சலிட்டார். ஆனால் அவர்கள் இருவரும் பொதுமக்கள் வருவதற்குள் மின்னல் வேகத்தில் அங்கிருந்து தப்பி சென்றனர்.
உடனே அவர் தூத்துக்குடி தென்பாகம் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து செயினை பறித்துவிட்டு தப்பிச்சென்ற வாலிபர்கள் இருவரையும் வலைவீசி தேடி வருகின்றனர்.