செய்திகள்
பிரதமர் மோடி- அமித்ஷா

பிரதமர் மோடி-அமித்ஷாவை கொல்லப்போவதாக மிரட்டல்

Published On 2020-03-04 10:41 GMT   |   Update On 2020-03-04 11:13 GMT
குடியுரிமை சட்டத்தை கொண்டு வந்த பிரதமர் மோடி-அமித்ஷாவை கொல்லப்போவதாக மிரட்டல் கடிதம் பா.ஜனதா அலுவலகத்துக்கு வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

சென்னை:

குடியுரிமை சட்டத்துக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. டெல்லியில் நடந்த போராட்டத்தில் வன்முறை வெடித்தது. இந்த நிலையில் சென்னை தி.நகரில் உள்ள பா.ஜனதா அலுவலகத்துக்கு மிரட்டல் கடிதம் வந்திருக்கும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

பா.ஜனதா அலுவலகத்தில் குண்டு வைப்போம். குடியுரிமை சட்டத்தை கொண்டு வந்த பிரதமர் மோடி, மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா, தமிழக பா.ஜனதா தலைவர்களில் ஒருவரான எச்.ராஜா ஆகியோரை கொலை செய்வோம் என்பது போன்ற வாசகங்கள் அதில் இடம்பெற்றுள்ளன.

இதுபற்றி மாம்பலம் போலீசில் தமிழக பா.ஜனதா கட்சி சார்பில் புகார் செய்யப்பட்டுள்ளது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மிரட்டல் கடிதத்தை அனுப்பியது யார்? என்பது பற்றியும் அவர்களின் பின்னணி குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

குடியுரிமை திருத்த சட்டத்தை அமல்படுத்தினால் தமிழக எம்.எல்.ஏ.க்களை கடத்துவோம் என்று வண்ணாரப்பேட்டை இன்ஸ்பெக்டருக்கு ஏற்கனவே மிரட்டல் கடிதம் வந்திருந்த நிலையில் பா.ஜனதா அலுவலகத்துக்கு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News