செய்திகள்
கைது

சூலூரில் மூதாட்டியிடம் நகை பறித்த கணவன்-மனைவி கைது

Published On 2020-02-25 10:53 GMT   |   Update On 2020-02-25 10:53 GMT
கோவை சூலூரில் மூதாட்டியை தாக்கி நகை பறித்த கணவன்-மனைவியை போலீசார் கைது செய்தனர்.

கோவை:

கோவை சூலூர் காளபாளையம் பகுதியை சேர்ந்தவர் பத்மாவதி (வயது 81). இவர் உடல்நிலை சரியில்லாத தனது மகனுடன் தனியாக வசித்து வருகிறார்.

சம்பவத்தன்று இதை அறிந்த அதே பகுதியைச் சேர்ந்த சுப்பிரமணி (47). அவரது மனைவி தாமரைச்செல்வி (45) ஆகியோர் அந்த மூதாட்டியின் வீட்டுக்கு சென்றனர். அங்கு தாமரைச்செல்வி வீட்டின் வெளியே நின்று யாராவது வருகிறார்களா என பார்த்துக் கொண்டார்.

சுப்பிரமணி வீட்டின் உள்ளே சென்று கத்தியை காட்டி மிரட்டி பத்மாவதியை தாக்கி அவரது கழுத்தில் இருந்த தங்கச் செயினை பறித்து கொண்டு அங்கு இருந்து தப்பி சென்றனர். இதை அறிந்த அக்கம் பக்கத்தினர் பத்மாவதியை மீட்டு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு அனுமதித்தனர்.

பின்னர் இதுகுறித்து சூலூர் போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து அங்கு பதிவாகி இருந்த சி.சி.டி.வி காட்சிகளை ஆய்வு செய்தனர். அப்போது சுப்பிரமணி மற்றும் தாமரைச்செல்வி ஆகியோர் செயினைப் பறித்து கொண்டு அங்கிருந்து தப்பிச் செல்லும் காட்சிகள் பதிவாகி இருந்தன.

இதையடுத்து போலீசார் சுப்பிரமணி மற்றும் தமிழ்ச்செல்வியை பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் மூதாட்டியிடம் செயினைப் பறித்ததை ஒப்புக்கொண்டனர். போலீசார் வழக்கு பதிவு செய்து கணவன் -மனைவி 2 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Tags:    

Similar News