இஸ்லாமியர்களுக்கு எதிராக அ.தி.மு.க. செயல்படுகிறது- திண்டுக்கல் லியோனி குற்றச்சாட்டு
திண்டுக்கல்:
தி.மு.க. தலைமைக் கழக பேச்சாளர் திண்டுக்கல் ஐ.லியோனி இன்று திண்டுக்கல்லில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
கடந்த 12-ந் தேதி சென்னை வண்ணாரப்பேட்டையில் நடந்த பொதுக்கூட்டத்தில் நான் கலவரத்தை தூண்டும் வகையில் பேசியதாக அமைச்சர் ஜெயக்குமார் குற்றம் சாட்டியுள்ளார். எனது பேச்சுக்கு பிறகுதான் கலவரம் வெடித்ததாக கூறியுள்ளார்.
இதற்கு முன்பே ராமேஸ்வரம், மதுரை ஆகிய ஊர்களில் நடந்த பொதுக் கூட்டங்களில் குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து பேசியுள்ளேன். ஆனால் அப்போதெல்லாம் என் மீது குற்றம் சொல்ல முடியாதவர்கள் தற்போது திசை திருப்புவதற்காக குறை கூறுகின்றனர். அ.தி.மு.க.வை பொறுத்தவரை சட்டசபையில் எந்த தீர்மானமும் நிறைவேற்ற முடியாமல் உள்ளனர். அதனை மறைக்க பா.ஜ.கவுடன் கைகோர்த்துக் கொண்டு அ.தி.மு.க. இஸ்லாமியர்களுக்கு எதிராக செயல்பட்டு வருகிறது.
வண்ணாரப்பேட்டையில் நடந்த பொதுக்கூட்டத்தில் டி.என்.பி.எஸ்.சி. தேர்வு முறைகேட்டில் நடந்த ஊழல் குறித்து புள்ளி விபரங்களுடன் பேசியதால் என் மீது வேண்டுமென்றே அவதூறு பரப்பி வருகின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார்.