செய்திகள்
கார்த்தி சிதம்பரம்

இஸ்லாமியர்களை இரண்டாம் தர குடிமக்களாக நடத்த பாஜக அரசு சதி- கார்த்தி சிதம்பரம் பேட்டி

Published On 2019-12-18 11:44 GMT   |   Update On 2019-12-18 11:44 GMT
இந்தியாவில் இஸ்லாமியர்களை இரண்டாம் தர குடிமக்களாக நடத்துவதற்கு பா.ஜ.க. அரசு சதி செய்து வருகிறது என்று கார்த்தி சிதம்பரம் குற்றம் சாட்டியுள்ளார்.

திருச்சி:

சிவகங்கை தொகுதி எம்.பி. கார்த்தி சிதம்பரம் திருச்சி விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-

இந்தியாவில் இஸ்லாமியர்களை இரண்டாம் தர குடிமக்களாக நடத்துவதற்கு பா.ஜ.க. அரசு திட்டமிட்டு செயல்பட்டு சதி செய்து வருகிறது. யூதர்களின் உரிமைகளை படிப்படியாக ஹிட்லர் பறித்ததை போல, இஸ்லாமியர்களின் உரிமைகளை ஒவ்வொன்றாக மத்திய பா.ஜ.க. அரசு பறித்து வருகிறது.

முத்தலாக் தடை சட்டம் என்ற பெயரில் இஸ்லாமிய இளைஞர்களை குற்றவியல் நடவடிக்கைக்கு உள்ளாக்கி சிறைப்படுத்தும் சிறு பான்மையினர் விரோத சட்டத்தை முதலில் கொண்டு வந்தது. பின்னர் காஷ்மீர் விவகாரத்தில் தலையிட்டு ஜனநாயக படுகொலைக்கு வித்திட்டது. இப்போது குடியுரிமை சட்டம் என்ற பெயரில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

அடுத்ததாக ஹிட்லரைப் போல வதை முகாமுக்கு இஸ்லாமியர்களை அனுப்பி சித்ரவதை செய்ய பா.ஜ.க. அரசு திட்டமிட்டுள்ளது. ஜெயலலிதா உயிரோடு இருந்திருந்தால் குடியுரிமை சட்டத் திருத்தத்தை நிச்சயமாக ஆதரித்து இருக்கமாட்டார்.


எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா வழியில் இருந்து அ.தி.மு.க. விலகி செல்கிறது. இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக இருப்பதாகவும், ஈழத்தமிழர் பிரச்சனையில் தி.மு.க., காங்கிரஸ் மீது பழி சுமத்தி ஆட்சிக்கு வந்த அ.தி.மு.க. குடியுரிமை சட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து இலங்கை தமிழர்களுக்கு துரோகம் செய்து விட்டது.

இலங்கையில் நடைபெற்ற இனப்படுகொலைக்கு காங்கிரஸ் காரணமல்ல. இலங்கை அரசுக்கும், விடுதலைப்புலிகளுக்கும் இடையே நடந்த போரில்தான் மக்கள் கொல்லப்பட்டனர். இலங்கையில் அப்பாவி தமிழர்களை கொலை செய்ய காங்கிரஸ் ஒருபோதும் கூறவில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News