கூடக்கோவில் அருகே காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை
திருமங்கலம்:
மதுரை மாவட்டம், கூடக்கோவில் போலீஸ் சரகத்துக்குட்பட்ட பெரிய உலகாணியைச் சேர்ந்தவர் மகாலிங்கம். இவரது மகன் மருதுபாண்டி (வயது 21). கடந்த ஆண்டு கல்லூரி படிப்பை முடித்த இவர் தன்னுடன் படித்த பெண்ணை காதலித்து வந்ததாக தெரிகிறது. இதற்கு மருதுபாண்டியன் வீட்டில் எதிர்ப்பு எழுந்தது.
இதனால் விரக்தியில் இருந்த அவர் நேற்று காலை தங்களது தோட்டத்தில் தூக்குப்போட்டு தற்கொலைக்கு முயன்றார்.
இதைப்பார்த்த உறவினர்கள் மருதுபாண்டியை தடுத்து அறிவுரை கூறி வீட்டுக்கு அனுப்பி வைத்தனர்.
ஆனால் தனது முடிவில் உறுதியாக இருந்த மருதுபாண்டி மாலையில் தோட்டத்துக்கு சென்று தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தகவல் அறிந்த கூடக்கோவில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
தற்கொலை குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.