ரஜினியும்-கமலும் இணைந்தாலும் பலனில்லை: ராஜேந்திர பாலாஜி பேட்டி
விருதுநகர்:
விருதுநகரில் இன்று பிளவக்கல் அணையில் பாசனத்துக்காக அமைச்சர் ராஜேந்திரபாலாஜி தண்ணீரை திறந்து வைத்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
ரஜினிகாந்த்தும், கமலும் அரசியலில் இணைந்து செயல்பட்டாலும், அவர்களது ரசிகர்கள் இணைந்து செயல்பட மாட்டார்கள். அதைவிட மக்கள் இதனை ஏற்கமாட்டார்கள். மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு.
எனவே ரஜினியும், கமலும் அரசியலில் இணைந்தால் பலனில்லை. எடப்பாடி பழனிசாமி முதல்வரானது அதிசயம் என ரஜினி கூறியுள்ளார். அரசியலில் அதிசயமாக தான் தலைவர்கள் உருவாகுவார்கள்.
அதன் அடிப்படையில் எடப்பாடி பழனிச்சாமி, ஓ.பன்னீர்செல்வமும் தலைவர்களாகி மக்கள் அவர்களை ஏற்றுக் கொண்டு உள்ளனர்.
அ.தி.மு.க. கூட்டணி கட்சிகளிடையே எந்த பிளவும் இல்லை. தி.மு.க. கூட்டணியில்தான் பிளவும் உள்ளது. உள்ளாட்சி தேர்தலில் அ.தி.மு.க உள்ளிட்ட அனைத்து கட்சியும் தனித்து போட்டியிட்டு தங்கள் பலத்தை நிரூபிக்க வேண்டும். இது எனது தனிப்பட்ட கருத்து.
இவ்வாறு அவர் கூறினார்.